எஸ்எஸ்எல்சி தேர்வில் (10-ம் வகுப்பு) தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வு எழுதாத மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், துணைத்தேர்வுக்கு தயார்படுத்தும் வகையிலும் அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்குவதற்கு தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை முடிவுசெய்துள்ளது.
இதுதொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் எம்.ஆர்த்தி, பள்ளிக்கல்வி இயக்குனர் க.அறிவொளி ஆகியோர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் கூட்டாக அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
தமிழக பள்ளிக் கல்வித்துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ், 6 முதல் 18 வயதுடைய, பள்ளி செல்லாத, இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைப்பதற்கான செயல்பாடுகள் மிகவும் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தொடர்ந்து கற்போம்' என்ற திட்டத்தின் வாயிலாக தமிழகத்தில் தற்போது 45 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வெழுத வராத மாணவர்களுக்காக உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு சிறப்பு பயிற்சிகள் வழங்க திட்டமிட்டப்பட்டுள்ளது.
இந்த ஸ்பெஷல் கோச்சிங் மூலம் அவர்களை தேர்ச்சி பெறச் செய்து 11, 12-ம் வகுப்பில் சேர்ப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், அவர்களுக்கு வாராந்திர தேர்வுகளை நடத்தி அவர்களை படிப்பில் முன்னேற்றுவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பயிற்சி, தேர்வு முடிவு வெளியாகும் நாள் முதல் துணைத் தேர்வு நடைபெறும் நாள் வரை தொடர்ந்து சிறப்பான முறையில் நடைபெறும். இதன்மூலம், மாணவச் செல்வங்கள் தங்கள் கல்வியை தொடர முடியும்.
பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் வீடுகளுக்கு சென்று பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அம்மாணவர்களை சிறப்பு பயிற்சி மையத்துக்கு அழைத்து வர பள்ளி மேலாண்மை குழ உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்காக பள்ளி ஆசிரியர்களுக்கு பொறுப்பு கொடுத்து அவர்களை தயார் செய்யவேண்டும். வராத மாணவர்களை அழைத்து வந்து, அவர்களுக்குத் தேவையான ஸ்பெஷல் கோச்சிங்கைத் தரவேண்டும்.
சிறப்பு வகுப்புக்கு மாணவர்கள் வருவதை பள்ளியின்ன் தலைமையாசிரியர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












