வரும் கல்வி ஆண்டில் (2024-25) தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 4.5 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மாணவர் சேர்க்கையை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டுக்கான (2024-2025) மாணவர் சேர்க்கை மார்ச் 1-ம் தேதி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்படும் மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு ஒரு மாதத்துக்கு முன்னதாகவே தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 4.5 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்களை சேர்க்க பள்ளிக் கல்வித் துறை இலக்கு நிர்ணயித்து அதற்கேற்ப செயல்பட்டு வருகிறது. வரும் கல்வி ஆண்டில் இருந்து தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயர் தொழில்நுட்ப ஆய்வகம், ஸ்மார்ட் வகுப்பறைகள் என பல்வேறு நவீன வசதிகள் அரசு பள்ளிகளில் கொண்டுவரப்பட உள்ளன.

அதோடு சுமார் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு டேப்லெட் எனப்டடும் கையடக்க கணினியும் வழங்கப்பட இருக்கிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு என்ன மாதிரியான நலத் திட்டங்கள் கிடைக்கும், அவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த அரசின் திட்டங்கள் என்னென்ன உள்ளன என்பன உட்பட பல்வேறு தகவல்களை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த வாரங்களில் அரசு பள்ளிகளில் தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் வரும் பள்ளிகளில் 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் சேர்ந்துள்ளனர். மார்ச் 30-ம் தேதி வரை மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டிவிடும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கான பணிகளில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications












