செவிலியப் பட்டயப் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப நடைமுறைகள் வரும் ஆகஸ்ட் 26-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக மருத்துவக் கல்வி இயக்ககம் தகவல் வெளியிட்டுள்ளது.
மாநிலத்தில் பிஎஸ்சி நர்சிங் படிப்புகளைத் தவிர்த்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் 2 ஆயிரமும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 8 ஆயிரத்துக்கும் அதிகமான செவிலியர் பட்டயப் படிப்புகள் உள்ளன.
அவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மட்டும் மருத்துவக் கல்வி இயக்கக தேர்வு வாரியம் நடத்துகிறது.
தற்போது இப்படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் வரும் 26-ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம், பல் மருத்துவம், கால்நடை மருத்துவம் உள்ளிட்டவற்றைப் போலவே நிகழாண்டு முதல் துணை மருத்துவப் படிப்புகளுக்கும் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.tnhealth.org அல்லது https://tnmedicalselection.net என்னும் இணையதளங்களில் செவிலியப் பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் செப்டம்பர் 6-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு செப்டம்பர் 13-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்றும் மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.