சென்னையில் அமைந்துள்ள முக்கியமான மகளிர் கல்லூரிகளில் முதன்மையானது காயிதே மில்லத் அரசினர் மகளிர் கல்லூரி ஆகும். ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மாணவிகளை பட்டதாரிகளாகவும், விஞ்ஞானிகளாகவும், நிபுணர்களாகவும் மாற்றி அனுப்புகிறது இந்த காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி. தரமான கல்வி ஒன்றையே தாரகமந்திரமாகக் கொண்டு இந்தக் கல்லூரி 50-வது ஆண்டை தொட்டுள்ளது.
காயிதே மில்லத் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி (Quaid-E-Millath Government College for Women) தமிழ்நாட்டில் சென்னையில் செயல்பட்டுவரும் மகளிருக்கான தமிழக அரசின் முதன்மையான கலைக் கல்லூரியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இக்கல்லூரி 1974-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தற்போது தன்னாட்சித் தகுதியுடன் சென்னை பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது. முனைவர் என்.ரமா தற்போது இக்கல்லூரியின் முதல்வராக செயல்பட்டு வருகிறார்.
கல்லூரியின் வரலாறு இந்தக் கல்லூரி அமைந்த கதை மிகவும் சுவாரஸ்யமானது. 1946-ல் அப்போதைய மெட்ராஸ் மாகாணமாக இருந்த போது அறிஞர் காயிதே மில்லத் மெட்ராஸ் மாகாணத்தின் சட்டப் பேரவையில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். சென்னை அண்ணா சாலையில் உள்ள முகமதியன் கல்லூரியை அப்போதைய அரசு கையகப்படுத்தி அரசு பெண்கள் கல்லூரியாக மாற்ற முயற்சித்தது. இதைத் தடுத்து நிறுத்துவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் காயிதே மில்லத் முயற்சித்தார். அந்தத் திட்டத்தை நிறுத்துவதற்கு சாத்தியத்திற்குரிய அனைத்து வழிகளிலும் அவர் முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை. இதையடுத்து மனம் தளராத காயிதே மில்லத் அப்போதைய உள்துறை அமைச்சர் சுப்பராயனை சந்தித்து முஸ்லிம் அறக்கட்டளைக்கு சொந்தமான ஒற்றைக் கல்லூரியை கையகப்படுத்துவதால் தமிழகத்தில் உள்ள முஸ்லிம் சமூகமே பாதிப்படையும் என்று புகார் செய்தார். மேலும் அதைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்று முறையிட்டார்.

அதற்கு அமைச்சர் சுப்பராயன் கூறும்போது, அந்த ஒற்றைக் கல்லூரிக்கு போராடுவதை விட்டுவிட்டு பல கல்லூரிகளை உருவாக்க நீங்கள் முயற்சிக்கலாமே என பதில் தந்தார்.
இந்த யோசனை காயிதே மில்லத்துக்கு சரியெனப் பட்டது. இதையடுத்து தனி ஆளாய் படைதிரட்டி, சிங்கப்பூர், மலேசியா, பர்மா என பயணம் மேற்கொண்டார். அப்போது அங்கு இருந்த முஸ்லிம் பெரியவர்கள், தொழிலதிபர்களிடம், பணம் திரட்டி உருவாக்கப்பட்ட கல்வி நிலையங்கள்தான் இன்று சென்னை ராயப்பேட்டை புதுக் கல்லூரி, அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரியாக, திருச்சியில் ஜமால் முகம்மது கல்லூரி என தல விருட்சம் போல் கல்வி போதிமரங்களாக வளர்ந்து நிற்கின்றன.
பின்னர் அண்ணா சாலையில் உள்ள முகமதியன் கல்லூரி அரசு பெண்கள் கல்லூரியாக மாறியது. அதற்குப் பின்னாளில் காயிதே மில்லத் மகளிர் அரசு கல்லூரி என்றே பெயர் வைக்கப்பட்டது.
1974-ம் ஆண்டில் காயித் கல்லூரி அரசு கல்லூரி என பெயர் மாற்றம் பெற்றாலும், இந்தக் கல்லூரி முன்பு முகமதியன் கல்லூரி என்ற பெயரில் பிரிட்டிஷார் காலத்தில் இருந்தே செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
30 ஏக்கர் பரப்பு 1974-வது ஆண்டில் 30 ஏக்கர் பரப்பளவில், ஐந்து பட்டப் படிப்புகளில் சில நூறு மாணவிகளுடன் தொடங்கப்பட்டது இந்தக் கல்லூரி. தற்போது இக்கல்லூரி 12 இளநிலை, 6 முதுநிலைப் படிப்புகளில் 4300-த்துக்கும் அதிகமான மாணவிகளுடன் சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது. கல்லூரியில் அதிக எண்ணிக்கையிலான மாணவிகள் சேர்ந்ததையடுத்து அடுத்து 2006-07 கல்வியாண்டில் இரு சுழற்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இக்கல்லூரியில் பயிலும் மாணவிகளில் பெரும்பாலானவர்கள் முதலாம் தலைமுறை பட்டதாரிகள் ஆவர்.
இக்கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. இங்கு 12 இளங்கலை, 3 தொழிற்கல்வி, 6 முதுகலை மற்றும் 3 ஆராய்ச்சி திட்டங்களை சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் தன்னாட்சி கல்லூரியாக சிறப்பான முறையில் பீடுநடை போட்டு வருகிறது.
கல்லூரியில் வழங்கப்படும் அனைத்து பட்டப்படிப்பு (UG) மற்றும் பட்டமேற்படிப்புகளுக்கும்(PG) விண்ணப்ப செயல்முறை பொதுவானதாகும்.
மேலும் இங்கு இளங்கலைப் படிப்புகளுக்கு, அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து பிளஸ்-2 (10+2) தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கல்லூரியில் உளள கல்வி திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு 24 ஆண்டுகள் (உடல்நலம் பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு 2 ஆண்டுகள் தளர்வு வழங்கப்படுகிறது).
முதுகலை திட்டங்களில் சேருவதற்கு, சம்பந்தப்பட்ட துறையில் இளங்கலைப் பட்டம் கட்டாயம் பெற்றிருக்கவேண்டும். கல்லூரியில் ஆவண சரிபார்ப்பு மற்றும் தகுதித் தேர்வில் மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை வழங்கப்படுகிறது.
பிஎச்.டி. படிப்புக்கு (Ph.D) திட்டங்கள், சேர்க்கை முற்றிலும் நுழைவுத் தேர்வை அடிப்படையாகக் கொண்டு மாணவ, மாணவிகள் சேர்க்கப்படுகின்றனர்.
கல்லூரியில் ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை தொடங்கும். இந்த ஆண்டில் கல்லூரியில் சேர சேர்க்கைப் படிவம் கல்லூரியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஜூன் 4-ம் தேதி முதல் கிடைக்கும் . கல்லூரி வழங்கும் படிப்புகளுக்கான சமீபத்திய சுற்று சேர்க்கைக்கான சேர்க்கை படிவத்தை சமர்ப்பிக்க கடைசி தேதியும் அதில் அறிவிக்கப்படும்.
கல்லூரி வழங்கும் படிப்புகளில் சேர ஆர்வமுள்ள மாணவி இறுதித் தகுதிப் பட்டியலில் தங்கள் பெயர் சேர்க்கப்படுவதற்கான சேர்க்கை படிவத்தை கடைசி தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலைவாய்ப்பு மாணவிகளுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் முயற்சியில் காயிதே மில்லத் அரசினர் மகளிர் கல்லூரி நிர்வாகம் இறங்கியுள்ளது. கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவிகளுக்கு வேலை வாய்ப்புக்கான திறன்களைப் பெறுவதற்காக தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் கலந்துகொள்வதன் மூலம் கல்லூரி மாணவிகள் பயனடைகின்றனர். மேலும் இளநிலை பட்படிப்பில் பயிலும் மாணவிகளுக்கான வங்கி மற்றும் நிதிச் சேவைகள், காப்பீடு மற்றும் தளவாடங்கள் போன்ற இரண்டு துறைகளில் பயிற்சித் திட்டம் ஆஃப்லைன் முறையில் வழங்கப்படுகிறது. இதுதவிர டிசிஎஸ் ஐஓஎன்(TCS iON) அமைப்பு இளநிலை, முதுநிலை கணினி அறிவியல் ஆன்லைன் படிப்புகளை மாணவிகளுக்கு வழங்குகிறது.
மேலும், மாணவிகள் தங்கள் கல்வி மற்றும் தொழில் ஆர்வத்தை மேம்படுத்த, தெளிவுபடுத்த உதவ, தனிப்பட்ட ஆலோசனை மற்றும் குழு அமர்வுகள் மூலம் அவர்களின் குறுகிய மற்றும் நீண்ட கால இலக்குகளை மேலும் மதிப்பீடு செய்ய வேலைவாய்ப்புப் பிரிவு சிறப்பான முறையில் செயல்படுகிறது. அதுமட்டுமல்லாமல்
திறன் தேர்வுகள், குழு விவாதங்கள், தொழில்நுட்ப மற்றும் மனிதவள நேர்காணல்களுக்கு தொழில்முறை பயிற்சியாளர்கள் மூலம் தேவையான அடிப்படை திறன் தொகுப்பு பற்றிய அறிவை வழங்கும் பணியையும் இந்தப் பிரிவு செய்கிறது.
விருந்தினர் பேச்சாளர்கள், கார்ப்பரேட் பணியாளர்கள் மற்றும் மிக முக்கியமாக உடனடியாக இடம் பெறும் மூத்த மாணவிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் மாணவர்களின் வேலைவாய்ப்பு திறன்களை மேம்படுத்தும் பணியையும் வேலைவாய்ப்புப் பிரிவு செய்து வருகிறது.
புகழ்பெற்ற நிறுவனங்களில் வேலை வாய்ப்புக்கு மாணவிகளைத் தயார்படுத்துதல் இந்த வேலைவாய்ப்புப் பிரிவின் முக்கிய பணியாகும்.
இறுதியாண்டு மாணவிகளுக்கு வளாகத்தில் மற்றும் வளாகத்திற்கு வெளியே நேர்காணல்களை ஏற்பாடு செய்தல் மற்றும் தொழில்கள் மற்றும் புகழ்பெற்ற நிறுவனங்களுடன் வேலைவாய்ப்புக்கு வசதி செய்யும் பணியையும் இந்த பிரிவு செவ்வனே செய்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல் கருத்தரங்குகள், பயிலரங்குகள், விருந்தினர் விரிவுரைகள் மற்றும் மாநாடுகள் மூலம் தொழில்துறையுடன் வழக்கமான தொடர்பு மூலம் திறன் இடைவெளியைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளையும் கல்லூரி நிர்வாகம் எடுத்து வருகிறது.
செமஸ்டர் கல்லூரியில் 2003-04 கல்வியாண்டில்தான் இளநிலை, முதுநிலை (UG, PG) ஆகிய இரண்டிற்கும் செமஸ்டர் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 2004-05ல் தன்னாட்சி வழங்கியதன் விளைவாக, கல்லூரி அதன் சொந்த பாடத்திட்டங்களை வடிவமைத்து கல்லூரி மாணவிகளுக்கு படிப்புகளை வழங்கி வருகிறது.
தற்போது, கல்லூரி கலை, அறிவியல் மற்றும் வணிகத்தில் 13 யுஜி படிப்புகள், 11 முதுகலை படிப்புகள், 5 எம்.பில். மற்றும் ஏழு பிஎச்.டி. படிப்புகளை வழங்கி வருகிறது. தற்போது 4,267 மாணவிகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
மேலும், மாணவிகளின் கல்வி சாதனைகளை மேம்படுத்த புதிய முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவிர்கள் ரூசா (RUSA) தொழிற்கல்வி பாடத்திட்டங்கள் மூலம் மென் திறன் திட்டங்களின் ஒரு பகுதியாக அரசு நிறுவனங்களால் நடத்தப்படும் தொழில் முனைவோர் மேம்பாட்டு படிப்புகளுக்கு தங்களை பதிவு செய்து தங்களை மேம்படுத்தி வருகிறனர். பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, மென் திறன்கள் மற்றும் கணினி எழுத்தறிவு திட்டத்தில் பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர கல்லூரியில் யுஜிசி குழு, நூலகக் குழு, பிடபிள்யூடி குழு, சேர்க்கைக் குழு, விடுதிக் குழு, விளையாட்டுக் குழு, தேர்வுக் குழு, ராகிங் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் குழு, ஒழுங்குமுறைக் குழு, மாணவர் நலக் குழு போன்ற பல்வேறு நிர்வாகப் பணிகளைப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பரிந்துரைக்கப்பட்டவர்கள் கவனித்து வருகின்றனர்.
கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. தமிழக அரசின் நிதியுதவியுடன் கூடிய 'வெளிநாட்டில் படிக்கும் திட்டத்தின்' கீழ், காயிதே மில்லத் மகளிர் அரசு கல்லூரியின் நான்கு மாணவிகளும் இரண்டு ஊழியர்களும் வெளிநாடுகளில் உள்ள சில பல்கலைக்கழகங்களுக்குச் சென்று படித்து வருகின்றனர்.
மேலும், கல்லூரியில் இலவச நெட்வொர்க் மூலம் இலவச இணைய வாய்ப்பை வழங்குகிறது.
கல்லூரி முகவரி:
Quaid-E-Millath Government College for Women (Autonomous)
74, Binny Road, Anna Salai, Chennai 600 002.
தொலைபேசி: +91-44-2951-5068, +91-44-2951-5071
இணையதள முகவரி: www.qmgcw.edu.in


Click it and Unblock the Notifications












