முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியல் மார்ச் 31ம் தேதியன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ பட்ட மேற்படிப்புகளான எம்.டி., எம்.எஸ்., மற்றும் எம்டிஎஸ் (பல் மருத்துவம்) படிப்புகளுக்கு நீட் தேர்வில் தகுதிப் பெற்றவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டது. கடந்த 11-ஆம் தேதி தொடங்கி 20-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதில், 11,650 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் கடந்த ஆண்டு நிலவரப்படி 1250 முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் இருந்த நிலையில், தற்போது மாநிலத்திற்கு 124 இடங்களை கூடுதலாக மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்தது.
அதன்படி, வரும் கல்வியாண்டில் மாநிலத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் 1,758-ஆக அதிகரித்துள்ளது. அதில், 50 சதவிகித இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படும். மீதமுள்ள இடங்களுக்கும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படும் 235 இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.