மத்திய அரசின் கீழ், செயல்படும் உயர்கல்வி நிறுவனமான தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவனத்தில் பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள மாணவர்கள் இந்த தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவனத்தில் சேர்க்கை பெற்று பயிலலாம். கூடுதல் விவரங்களுக்கு https://npti.gov.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறியலாம்.
தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவனம் என்று அழைக்கப்படும் நேஷனல் பவர் டிரெய்னிங் இன்ஸ்டிடியூட் (என்பிடிஐ), ஃபரீதாபாத்தில் உள்ள கார்ப்பரேட் அலுவலகத்துடன் மத்திய அரசின் மின் அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு அரசு பயிற்சி நிறுவனமாக அமைந்துள்ளது. ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக என்பிடிஐ (NPTI) தனது அர்ப்பணிப்பு சேவையை நாட்டுக்காக வழங்கி வருகிறது.
மத்திய நீர் மற்றும் மின் ஆணையம் (பவர் விங்) 1965-1975-ல் நெய்வேலி (1965), துர்காபூர் (1968), பதர்பூர், டெல்லி (1974) மற்றும் நாக்பூர் (1975) ஆகிய இடங்களில் அனல் மின் நிலையப் பணியாளர்களுக்கான பயிற்சி நிறுவனங்களை நிறுவியது. அந்த நேரத்தில் நாட்டில் நிறுவப்பட்ட பயிற்சி நிலையங்களாக இவை அமைந்துள்ளன.
இது 1972-ல் பவர் சிஸ்டம்ஸ் பயிற்சி நிறுவனத்தையும் (PSTI) பெங்களூரில் 1974-ல் ஹாட் லைன் பயிற்சி மையத்தையும் (HLTC) நிறுவியது. 1970களில் மத்திய நீர் மற்றும் மின் ஆணையம் மத்திய மின்சார ஆணையம் (CEA) மற்றும் மத்திய நீர் ஆணையம் (CWC) எனப் பிரிக்கப்பட்டதன் மூலம், நிறுவனம் மத்திய மின்சார ஆணையத்தின் (CEA) கீழ் வந்தது.

1970களின் பிற்பகுதியில், நாட்டின் மின் துறையை மேம்படுத்துவதற்காக இந்திய அரசால் அமைக்கப்பட்ட ராஜ் தேக்ஷ்யா கமிட்டி, மின்சாரத் துறையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு முறையான பயிற்சியைப் பரிந்துரைத்தது. அதன்படி, மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கட்டாயப் பயிற்சி அளிக்கும் வகையில் இந்திய மின்சார விதி திருத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இதனுடன், மத்திய மின்சார ஆணையத்தின் கீழ் உள்ள அனல் மின் நிலைய பணியாளர் பயிற்சி நிறுவனங்கள் 1980-ஆம் ஆண்டில் மின்சக்தி அமைச்சகத்தின் கீழ் ஒரு தனி தன்னாட்சி அமைப்பாக மின் பொறியாளர்கள் பயிற்சி சங்கமாக (PETS) அமைக்கப்பட்டது. நிறுவனங்களின் விரைவான வளர்ச்சிக்காக இவை அமைக்கப்பட்டன.
பின்னர், 1993 -ல் பவர் இன்ஜினியர்ஸ் டிரெய்னிங் சொசைட்டி (பிஇடிஎஸ்) நேஷனல் பவர் டிரெய்னிங் இன்ஸ்டிடியூட் (என்பிடிஐ) என மறுபெயரிடப்பட்டது. பவர் சிஸ்டம்ஸ் பயிற்சி நிறுவனம் (PSTI) மற்றும் ஹாட் லைன் பயிற்சி மையம் (HLTC) 2002-ல் என்பிடிஐ (NPTI) உடன் இணைக்கப்பட்டது.
தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவனம் (NPTI) இந்திய அரசாங்கங்களின் ஆட்சிக் காலத்தில் தொடர்ந்து வளர்ச்சியடைந்தது. முன்பு அனல் மின் உற்பத்தியில் மட்டுமே பயிற்சி அளித்து வந்த இந்நிறுவனம், தற்போது மின்சாரத் துறையின் அனைத்துப் பிரிவுகளிலும் அதாவது உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகம் போன்றவற்றில் பயிற்சி அளிக்கத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டுள்ளது.
தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவனம் (என்பிடிஐ-NPTI) அதன் இருப்பு கடந்த நான்கு தசாப்தங்களில், பெரும்பாலான மின்சார வாரியங்கள், பொது மற்றும் தனியார் துறை பயன்பாடுகள் மற்றும் வளரும் நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொறியாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை மெருகேற்றி வருகிறது.
என்பிடிஐ(NPTI) உயர்கல்வி நிறுவனமானது கடந்த 5 தசாப்தங்களாக வழக்கமான திட்டங்களில் 3,20,000 ஆற்றல் வல்லுநர்களுக்கு பயிற்சியை உயர்கல்வியையும் அளித்துள்ளது. என்பிடிஐ(NPTI) என்பது உலகின் முன்னணி ஒருங்கிணைந்த ஆற்றல் பயிற்சி நிறுவனமாக பெருமை மிகுந்து விளங்குகிறது. என்பிடிஐ(NPTI) என்பது, பரந்த புவியியல் பரவலைக் கொண்ட உலகின் ஒரே நிறுவனமாகும்,
மேலும் மின் துறையில் கல்வி மற்றும் பயிற்சித் திட்டங்களை உள்ளடக்கியது. பல்வேறு உள்கட்டமைப்புத் துறைகளில் மிக முக்கியமான துறையான பவர் செக்டரில் என்பிடிஐ(NPTI) - நிறுவனத்தில் மட்டும் அர்ப்பணிப்பு ஆசிரியர்களைக் கொண்டு சிறந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இது நாட்டிற்கு அதிக மின் சக்தியை வழங்குகிறது. இவ்வாறு என்பிடிஐ(NPTI) வழங்கும் பயிற்சியானது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் பொருளாதாரத்தின் வளர்ச்சியை மேம்படுத்துவதில் செவ்வனே தனது பணியைச் செய்கிறது.
நாட்டின் பல்வேறு மண்டலங்களில் உள்ள என்பிடிஐ-யின் பதினொரு நிறுவனங்கள் மூலம் NPTI அகில இந்திய அடிப்படையில் செயல்படுகிறது:
வடக்கு மண்டலம்
NPTI கார்ப்பரேட் அலுவலகம், ஃபரீதாபாத்
NPTI (வடக்கு மண்டலம்) பதர்பூர், புது டெல்லி
NPTI (ஹைட்ரோ பவர் பயிற்சி மையம்), நங்கல்
தெற்கு மண்டலம்
NPTI (பவர் சிஸ்டம் பயிற்சி நிறுவனம்), பெங்களூரு
NPTI (ஹாட் லைன் பயிற்சி மையம்), பெங்களூரு
NPTI (தெற்கு மண்டலம்), நெய்வேலி
NPTI, ஆலப்புழா
கிழக்கு & வடகிழக்கு பகுதி
NPTI (கிழக்கு மண்டலம்), துர்காபூர்
NPTI (வடகிழக்கு மண்டலம்), குவஹாத்தி
மேற்கு மண்டலம்
NPTI (மேற்கு மண்டலம்), நாக்பூர்
NPTI, ஷிவ்புரி ஆகிய மண்டலங்களில் அமைந்து நாட்டுக்குத் தேவையான உற்பத்தியை வழங்கி வருகிறது.
என்பிடிஐ-யின் மனிதவள பயிற்சி மற்றும் கல்வி திட்டங்கள்
என்பிடிஐ(NPTI)-இன் பல்வேறு கல்வி நிறுவனங்களில் வெப்பம், நீர், பரிமாற்றம் மற்றும் விநியோகம் மற்றும் மேலாண்மை ஒழுங்குமுறை விவகாரங்கள் போன்ற பகுதிகளில் பல்வேறு நீண்ட கால, நடுத்தர கால மற்றும் குறுகிய கால பயிற்சி நிகழ்ச்சிகள் ஊழியர்களுக்காகவும், மாணவர்களுக்காகவும் நடத்தப்படுகின்றன. பல்வேறு மின் பயன்பாட்டுக்கான தனிப்பயனாக்கப்பட்ட பயிற்சி நிகழ்ச்சிகளும் ஆண்டு முழுவதும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. 1981-இல் திருத்தப்பட்ட இந்திய மின்சார விதிகள், 1956 இன் விதி 3, துணை விதி 2A இன் கீழ், இந்திய மின்சாரத் தொழிலை இயக்க நன்கு பயிற்சி பெற்ற பணியாளர்கள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்ற நோக்கில என்பிடிஐ(NPTI) ஆனது பல்வேறு பயிற்சித் திட்டங்களையும் நடத்துகிறது.

சர்வதேச பயிற்சி
அதுமட்டுமல்லாமல் ஓமன், வங்கதேசம், கம்போடியா, பூடான், எத்தியோப்பியா, இராக், கென்யா, மலேசியா, மெக்சிகோ, மியான்மர், நேபாளம், நைஜீரியா, ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், சூடான், சிரியா, ஜாம்பியா, ஜிம்பாப்வே போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வல்லுநர்கள் பல்வேறு பயிற்சிகளை இங்கு பெற்றுள்ளனர்.
புவியியல் தகவல் அமைப்புகள்
என்பிடிஐ(NPTI) கார்ப்பரேட் அலுவலகம், புவியியல் தகவல் அமைப்பு (ஜிஐஎஸ்) ஆதார மையம் ஆகியவை ஃபரீதாபாத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மின் துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஜிஐஎஸ் மற்றும் ரிமோட் சென்சிங்கில் முதுகலை பட்டயப் படிப்புகளையும் மையம் நடத்தி வருகிறது.
பெங்களூருவில் ஹாட் லைன் பயிற்சி மையம்
400 KV வரையிலான டிரான்ஸ்மிஷன் லைன்களுக்கான லைன் பராமரிப்புக்காக, பெங்களூரில் உள்ள என்பிடிஐ(NPTI)-நிறுவனம் ஹாட் லைன் பயிற்சி மையத்தில் ஒரு வசதி (ஆசியாவிலேயே முதன்முறையாக) உருவாக்கப்பட்டுள்ளது, இது பயிற்சி பெற்ற பணியாளர்களுக்கு மின்சாரத் தடையின்றி பராமரிப்பு தேவைகளைக் கையாள உதவுகிறது. துணை மின்நிலைய உபகரணங்களை தண்ணீரில் கழுவுவதற்கான வசதிகளும் அங்கு உள்ளன.
ஆலோசனை
தொழில்துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், உள்கட்டமைப்பு மற்றும் நிபுணத்துவத்தை சிறப்பாகப் பயன்படுத்துவதற்கு தேவையாந பயிற்சிகள், ஆலோசனைகளை, என்பிடிஐ(NPTI) வழங்கவுள்ளது. பயிற்சி தேவை பகுப்பாய்வு, பயிற்சி வசதிகளை மேம்படுத்துதல், தனிப்பயனாக்கப்பட்ட பாடத்திட்ட வடிவமைப்பு, திறன் மதிப்பீடு / பதவி உயர்வுக்கான மதிப்பீடு உள்ளிட்ட மனித வள மேம்பாட்டுத் துறையிலும் என்பிடிஐ(NPTI) ஆலோசனை வழங்குகிறது.
தற்போது என்பிடிஐ வளாகங்கள் நெய்வேலி, நாக்பூர், பரீதாபாத் - புதுடெல்லி, சிவ்புரி - மத்தியபிரதேசம், பெங்களூரு நகரங்களில் எழிலுற அமைந்துள்ளன.
இந்த தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவன (NPTI) உயர்கல்வி நிறுவனத்தில் பல்வேறு உயர்ரக படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இந்தப் படிப்பு விவரங்கள்: போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா கோர்ஸ் - பவர் பிளான் இன்ஜினியரிங், போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா கோர்ஸ் - ரீனிவெபல் எனர்ஜி அண்டு கிரிட் இன்டர்பேஸ் டெக்னாலஜிஸ்,
எம்.பி.ஏ., - பவர் மேனேஜ்மெண்ட் ஆகியவை இங்கு வழங்கப்பட்டு வருகின்றன.
தகுதிகள்: பி.ஜி.டி.சி., படிப்புகளில் சேர்க்கை பெற மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், சி அண்டு ஐ, பவர் இன்ஜினியரிங் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு துறையில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.டெக்., / பி.இ., பட்டம் பெற்றிருக்க வேண்டும். எம்.பி.ஏ., படிப்பில் சேர்க்கை பெற, ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளநிலை பட்டப்படிப்புடன் கேட், மேட், சிமேட், சேட், ஜிமேட் ஆகிய நுழைவுத்தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேவையான மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே இந்த உயர்கல்வி நிறுவனத்தில் சேர முடியும்.
மேலும் எம்.பி.ஏ. படிப்பு மட்டும் புதுடெல்லியில் உள்ள பரீதாபாத் வளாகத்தில் மட்டுமே வழங்கப்படுகிறது.
பிஜிடிசி படிப்புகளுக்கு ஆண்டுதோறும் பிப்ரவரியில் சேர்க்கை நடைபெறும். அதே நேரத்தில்
எம்.பி.ஏ படிப்புகளுக்கு இந்த ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி சேர்க்கை நடைபெறவுள்ளது.
இணையதள முகவரி: கூடுதல் விவரங்களுக்கு https://npti.gov.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறியலாம்.
இந்த என்பிடிஐ உயர்கல்வி நிறுவனம் மூலம் ஏராளமான பேர் திறன் பயிற்சி பெற்றும், உயர்கல்வி பெற்றும் நல்ல நிலையில், நல்லதொரு பணியில் தங்களது வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளனர். எனவே இந்த உயர்கல்வி நிறுவனத்தில் சேரும் அனைவருக்கும் நல்ல எதிர்காலம் அமையும் என்று கல்வி நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications












