தமிழகத்தில் பிராணிகள் நலன் தொடர்பான முதுகலை டிப்ளமோ படிப்பு அறிமுகம் செய்யப்பட்டு மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த முதுகலை டிப்ளமோ படிப்பில் பட்டதாரிகள் சேரலாம் என இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ) அறிவித்துள்ளது. இந்தப் படிப்பில் சேர விரும்புவோர் https://ignouadmission.samarth.edu.in/ என்ற இணையதள லிங்க்கைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் இக்னோ அறிவிப்பு செய்துள்ளது.
இந்த படிப்பு அறிமுகம் தொடர்பாக இக்னோ பல்கலைக்கழக சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
விலங்குகள், பிராணிகள் நலன் தொடர்பான ஓராண்டு கால முதுகலை டிப்ளமோ படிப்பை இக்னோ பல்கலைக்கழகம் கடந்த 2020-ம் ஆண்டே அறிமுகப்படுத்தியது. பிராணிகள் நலன், அறவியல், பிராணிகள் நல பிரச்சினைகள், பிராணிகள் தொடர்பான சட்டங்கள், கொள்கைகள், பிராணிகள் நல நடைமுறைகள் போன்ற பாடங்களை உள்ளடக்கிய இப்படிப்பில் பட்டதாரிகள் சேர்ந்து பயில முடியும். தற்போது இந்தப் படிப்பில் ஏராளமான மாணவ, மாணவிகள் சேர்ந்து படித்து வருகின்றனர்.

இந்த படிப்பு, பிராணிகள் நலனில் அக்கறையும் ஆர்வமும் உடையவர்கள், பிராணிகள் நலன் தொடர்பான நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களில் பணியாற்றுவோர், கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள், பிராணிகள் நலவாரிய உறுப்பினர்கள், வனத்துறை அலுவலர்கள், வனப்பாதுகாப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு பல்வேறு நிலைகளில் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று அறிவிக்கப்படுகிறது.
இந்த டிப்ளமோ படிப்புக்கு இந்திய பிராணிகள் நல வாரியம் அனுமதி அளித்துள்ளது. இந்த டிப்ளமோ படிப்புக்கான ஜூலை பருவ மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது.
இந்தப் படிப்பில் சேர விரும்பும் மாணவச் செல்வங்கள் https://ignouadmission.samarth.edu.in/ என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜுன் 30-ம் தேதி ஆகும்.
இந்தப் படிப்பு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு இக்னோ மண்டல அலுவலகத்தை 044-26618040 எண்ணில் அலுவுலக வேலை நாட்களில் தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு இக்னோ பல்கலைக்கழக சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications












