எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வில் அனைத்து இடங்களுமே நிரம்பிவிட்டதாக மருத்துவக் கல்வி இயக்குநரக தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்பிடங்களுக்கான கலந்தாய்வு கடந்த வாரம் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, அதில் காலியாக இருந்த இடங்கள் மற்றும் கலந்தாய்வில் இடங்களைத் தேர்வு செய்துவிட்டு கல்லூரியில் மாணவர்கள் சேராததால் ஏற்பட்ட காலியிடங்களுக்கும் அகில இந்திய ஒதுக்கீட்டிலிருந்து திரும்பக் கிடைக்கும் இடங்களுக்கும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது.
கடந்த ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 1ம் தேதியன்று வரை மூன்று நாள்கள் நடைபெற்ற இந்த கலந்தாய்வில் மொத்தம் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக இருக்கும் 146 எம்பிபிஎஸ் இடங்களுக்கும், 12 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக இருக்கும் அரசு ஒதுக்கீட்டுக்கான 69 எம்பிபிஎஸ் இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெற்றது.
இதைத் தவிர்த்து, சிதம்பரம் ராஜா முத்தையா, கே.கே.நகர் இஎஸ்ஐ, ஐஆர்டி பெருந்துறை ஆகிய 3 மருத்துவக் கல்லூரிகளில் காலியாகவுள்ள 48 எம்பிபிஎஸ் இடங்களும் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் அனைத்து இடங்களுமே நிரப்பப்பட்டன. மேலும், சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் காலியாக இருக்கும் 16 பிடிஎஸ் இடங்களும் நிரப்பப்பட்டன. மூன்று நாள்கள் நடைபெற்ற இந்த கலந்தாய்வின் நிறைவில் 261 எம்பிபிஎஸ் இடங்களும், 16 பிடிஎஸ் இடங்களும் நிரம்பியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கலந்தாய்வில் இடங்களைப் பெற்றவர்களில் யாரேனும் கல்லூரிகளில் சேராமல் இருக்கும் பட்சத்தில், அந்த இடங்களுக்கு மட்டும் அடுத்த வாரத்தில் சிறப்புக் கலந்தாய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.