சென்னை : நேற்று நடந்த மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான பொது கலந்தாய்வில் முதல் நான்கு இடங்களை பிடித்தவர்கள் சென்னை மருத்துவக் கல்லூரியை தேர்ந்து எடுத்தனர். எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு நாளை நடக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் மருத்து பட்ட மேற்படிப்பில் சேர்ந்து படிப்பதற்கான தரவரிசை பட்டியல் ஏற்கனவே மருத்துவக் கல்வி இயக்குனரகத்தால் வெளியிடப்பட்டது.
அதைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு கடந்த 8ந் தேதி சென்னை பல் நோக்கு அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. 11 பேர்கள் அழைக்கப்பட்டதில் 10 பேர் வந்திருந்தனர். அவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.
பொது கலந்தாய்வு
பொது கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. இந்த கலந்தாய்வுக்கு 400 பேர்கள் அழைக்கப்பட்டனர். அவர்களுடன் பெற்றோர்களும் வந்திருந்தனர். கலந்தாய்வுக்கு தரவரிசை பட்டியல்படி அழைக்கப்பட்டனர். அவர்கள் விரும்பிய படிப்பை விரும்பிய கல்லூரியை தேர்வு செய்தனர்.
தரவரிசையில் முதல் இடம்
தரவரிசையில் முதல் இடம் பிடித்த மாணவி டாக்டர் புவனேஸ்வரி சென்னை மருத்துவக் கல்லூரியில் மகப்பேறு படிப்பையும் 2வது மாணவி ஐஸ்வர்யா சென்னை மருத்துவக் கல்லூரியில் தோல் சிகிச்சை படிப்பையும் தேர்ந்து எடுத்தனர். 3வது வந்த மாணவர் பிரதாப் சென்னை மருத்துவக் கல்லூரியில் ரேடியோ டயக்னாசிஸ் (ஸ்கேன்) படிப்பை எடுத்தார்.
முதல் கட்டம் முடிவு
4வதாக வந்த மாணவர் சீனிவாசன் சென்னை மருத்துவக் கல்லூரியில் ரேடியோ டயக்னாசிஸ் படிப்பை தேர்வு செய்தார். இந்த பொது கலந்தாய்வு நாளை மே 11ந் தேதி வரை நடைபெறும். முதல் கட்ட பொது கலந்தாய்வு நாளையுடன் முடிவடைகிறது.
எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு கலந்தாய்வு
நாளைக்கு வியாழக்கிழமை பொது கலந்தாய்விற்கான கடைசி நாள். நாளை எஸ்சி மற்றும் எஸ்டி (பழங்குடியினர்) ஆகியோருக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. அதற்கு 19 பேர்களுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வில் உள்ள காலியிடங்கள் இன்னும் ஒரு வாரத்தில் 2வது கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டு நிரப்பப்பட உள்ளன. முதல் கட்ட கலந்தாய்வு நாளையுடன் முடிகிறது.