நேர்முகத்தேர்வு என்பது, உங்கள் தகுதியை சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு நிரூபிக்கும் முதல் மற்றும் கடைசி வாய்ப்பு. தீப்பெட்டியில் உள்ள கடைசி தீக்குச்சி தான் மிக கவனமாக கையாளப்படுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
முதலே, கடைசியோ ஒவ்வெரு முறையும் நேர்முகத்தேர்வை கடைசி தீக்குச்சியாக கையாளுங்கள். கூடுமானவரை வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முற்படுங்கள். சில சமயம் முடிவுகள் மாறுபடலாம்.
ஜெயித்தால் வெற்றி, பின்வாங்கினால் அனுபவம், அடுத்த முறை சாட்டை சுழற்ற பயன்படும் ஒரு யுக்தியாக எடுத்துக்கொண்டு முன்னேறிக்கொண்டே இருங்கள். நேர்முகத்தேர்வில் பெரும்பான்மையான நிறுவனம் கீழ்கண்ட அம்சங்களைத்தான் உங்களிடம் எதிர்பார்கின்றன...
நேரம்:
"காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருக்காது", என்று கேள்வி பட்டிருப்பீர்கள் எனவே மிக முக்கியமான விஷயம், இன்டெர்வியூக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு நிமிடம் கூட தாமதமாக வருவதை தவிர்ப்பது. முடியுமானல் ஒரு 15 நிமிடங்களுக்கு முன்னரே அந்த இடத்தை அடைந்துவிடுவது நல்லது.
அமரும் முறை:
பேக், லேப்டாப், கைப்பை போன்ற உடைமைகளை நேர்காணல் அறைக்கு வெளியில் வைத்துவிட்டு செல்வது நலம்.
கால்களுக்கு அருகிலோ, நேர்காணல் செய்பவரின் மேஜை மீதோ வைப்பதை தவிர்க்க வேண்டும். கால் மேல் கால்போட்டு அமர்வதை தவிர்த்து, நேராக நிமிர்ந்து அமர்ந்து கண்ணோடு கண் பேசும் தோனியில் அமர்வது சிறப்பு.
அதிகமாகப் பேசக் கூடாது:
கொட்டாவி விடுவது , சூயிங்கம் மெல்வது, தேவைக்கு அதிகமாகப் பேசுவது போன்றவைகளை தவிர்ப்பது நலம். அதே போல் கேள்விகளுக்கு ஒரு வார்த்தையில் பதில் சொல்வதை தவிர்த்து, முழு வாக்கியங்களாகப் பேச முயற்சிப்பது நலம்.
கேள்விகளுக்கு பதில் தெரியும் என்றால் சாடரென்று கூறிவிடுங்கள். இல்லை என்றால் தெரியாது என்று நேரடியாக கூறிவிடலாம். சுற்றி வளைத்து பதில் கூறும் போது நேரத்தின் அருமை தெரியாதவராக அறியப்பட வாய்ப்புள்ளது.
சம்பளம்:
அனைவருமே ஏதோ ஒரு வகையில் பணத்திற்காகத்தான் வேலை செய்கிறோம், இருந்த போதும் சம்பளம் குறித்த கேள்விகளை நீங்களாகத் கேட்பதை தவிர்ப்பது நலம்.
அவர்களாக கேட்கும் பட்சத்தில் உங்களின் தேவையை நாசுக்காக என்னுடைய பழைய அலுவகத்தில் இவ்வளவு வாங்கி கொண்டிருந்தேன். இப்போது எனது தேவைகள் இது என பக்குவமாக எடுத்து கூறுங்கள்.
எதிர்மறையான கருத்து:
நீங்கள் முன்பு பணியாற்றி நிறுவனம் உங்களை கொடுமைப்படுத்திருந்தாலும் கூட ஏதேனும் சில சொற்பமான நல்ல விஷயங்களால் நீங்கள் பயன் அடைந்திருக்க கூடும் அதை மேற்கோள் காட்டுங்கள்.
படித்த கல்லூரி குறித்தோ, ஏற்கெனவே பணியாற்றிய நிறுவனம் குறித்தோ ஒரு போதும் எதிர்மறையான கருத்துகள் பகிர முற்படாதீர்கள் இது உங்கள் மீது தற்சமயம் இரக்கம் காட்ட வாய்ப்பாக அமையுமே தவிர நிரந்தர வினையாக அமைய வாய்ப்புள்ளது.
பேசும் முறை:
திறமை இருந்தாலும் கர்வமும், அந்த கர்வத்தால் தோற்றுவிக்கப்படும் அலட்சியமும் இருக்கவே கூடாது. அது வெற்றியை அழித்துவிடும்.
தன்னம்பிக்கை இருக்க வேண்டும். அதே சமயம் தலைக்கனம், திமிர், அலட்சியம் போன்றவை உங்கள் பேச்சில் வெளிப்படுவதாக நேர்காணல் காணும் அலுவலர் நினைத்துவிடக் கூடிய அளவிற்கு இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள்.
கைகொடுக்கும் முறை:
அவர்களாக கைகொடுக்கும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு கை கொடுக்கும் படி வசதியாக இருந்தால் தாரளமாக கொடுக்கலாம். இல்லாத பட்சத்தில், நீங்களாகவே கைநீட்டுவதை தவிர்க்கலாம்.
இறுதியாக நேர்முகத்தேர்வு முடிந்து வெளியே வரும் முன், மறக்காமல் முகமலர்ச்சியுடன் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பது பண்பாளராக காட்டும் என்பதை மறவாதீர்கள்.