மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினமான நவம்பர் 14-ம் தேதி ஆண்டுதோறும், குழந்தைகள் தினமாக இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகள் மீது நேரு காட்டியை அன்பை வெளிப்படுத்தும் விதமாகத்தான் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
தன் குழந்தையைத் தாண்டி அனைத்து குழந்தைகள் மீதும் நேசத்தை வெளிப்படுத்தியதையே நேருவின் வரலாறு காட்டுகிறது. இன்றைய தினத்தில் குழந்தைகள் தினம் குறித்த சில சுவாரஸ்யமான விசயங்களை தெரிந்துகொள்வோம் வாங்க.
சர்வதேச குழந்தைகள் தினம்
சட்டென இலகிவிடும் மனம் படைத்தோரை குழந்தை மனம் கொண்டவன் என்றுதான் நாம் அனைவருமே கூறுவோம். கள்ளம் கபடமற்ற இந்த குழந்தைகளுக்காக உலகம் முழுவதும் நவம்பர் 20-ம் நாள் சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதற்குக் காரணம் நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தான்.
குழந்தைகள் நலனே முக்கியம்
1889 நவம்பர் 14-ந் தேதியன்று அலகாபாத்தில் பிறந்தவர் ஜவகர்லால் நேரு. பிரதமராக நேரு இருந்த போது, நாடு முழுவதும் உள்ள குழந்தைகள், இளைஞர்களின் நல்ல உடல்நிலை, கல்வி, முன்னேற்றம் குறித்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார். தொடர் பணியின் இடையே, குழந்தைகளுடன் உரையாடுவதை வழக்கமாகவே கொண்டிருந்தார் நம் நேரு.
குழந்தை மனம் கொண்ட நேரு மாமா
ஜவகர்லால் நேரு, அரசியல் துறையில் தேர்ச்சியும், அனுபவமும் எத்தனை பெற்றிருந்தாலும், உள்ளத்தால் குழந்தை மனதுடனேயே இருந்ததால், குழந்தைகளின் வளர்ச்சி, முன்னேற்றத்தில் அதிக ஈடுபாடு காட்டினார். குழந்தைகளுக்கு சரியான முறையில் கல்வி போதிக்கப்பட, வளர்ச்சிக்கு வித்திட வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார். அதனால்தான் இன்றும் நம் நாட்டு குழந்தைகள் அவரை நேரு மாமா என அன்போடு அழைக்கின்றனர்.
நேருவின் சிறந்த புகைப்படம்
உலகிலேயே அதிக எண்ணிக்கையில் குழந்தைகளைக் கொண்டுள்ள நாடுகளில் முக்கியமானதாக இருப்பது இந்தியா. அன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் மீது நேருவும், நேரு மீது குழந்தைகளும் அளவு கடந்த அன்பு வைத்திருந்ததால் தான் அவரது பிறந்தநாளை இன்றும் நாம் குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம். அவரது சிறந்த புகைப்படங்களில் குழந்தைகளோடு அவர் இருக்கும் படம் சிறந்த புகைப்படமும் ஆகும்.
இன்றைய நாளில் என்ன செய்யலாம்?
இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என்ற சொல்லில் உள்ள உண்மையைத் தெளிவுபடுத்துவதற்காகத் தான் குழந்தைகள் தினத்தன்று பள்ளிகளில் மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டி, கட்டுரை, ஓவியம் என பல போட்டிகள் நடத்தப்படுகிறது.
இவர்கள் குழந்தைகள் இல்லையா?
இன்று நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வந்தாலும் இந்தியாவில் குழந்தை தொழிலாளர்களும் அதிகரித்து வருவதாக கூறுகிறது ஆய்வுகள். குழந்தைத் தொழிலாளர்கள் இன்றி, அனைத்துக் குழந்தைகளுக்குமே அடிப்படை கல்வியும், அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்பதே குழந்தைகள் தின விழாவின் நோக்கம்.
சர்வதேசத்தில் குழந்தைகள் தினம்
1925-ம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற குழந்தைகள் நல்வாழ்வு தொடர்பான சர்வதேச மாநாட்டில் குழந்தைகளுக்கான அடிப்படை உரிமைகள் மற்றும் அவர்களுக்கான கல்வி உறுதி குறித்து அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 1954-ம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்சபை, சர்வதேச குழந்தைகள் தினம் என்ற ஒரு கருத்தாக்கத்தை ஏற்றுக் கொண்டு இன்று பல்வேறு நாடுகளில் பல்வேறு தேதிகளிலும் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதுவும் கல்வி தான்
நாட்டின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக விளங்குவது குழந்தைப் பருவத்தில் கற்றுக்கொள்ளும் விஷயங்கள்தான். குழந்தைப் பருவத்தில் நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். வெறும் புத்தகங்கள் மட்டுமே சிறந்த கல்வி என்ற மனநிலை மாறி தங்கள் குழந்தைகளை, மற்ற குழந்தைகளுடன் பழக விட வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு இடையே சகோதரத்துவம், உதவும் மனப்பான்மை வளரும். அதுவும் ஓர் கல்வி தான் என உணர வேண்டும்.
குழந்தையை குழந்தையாகவே பாருங்கள்
இன்றைய குழந்தைகள் தினத்தில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் தங்களது குறைகளை நீக்கி, குழந்தைகளின் ஆசைகளையும், ஆர்வத்தையும், மனநிலையையும், அணுகுமுறைகளையும் கூர்மையாகக் கவனிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்களுக்கான பாடத்தைப் போதிக்க வேண்டும். இவ்வாறான அணுகுமுறையே குழந்தைகளின் நாளைய ஆக்கப்பூர்வமான சாதனைகளுக்கு வித்தாக அமையும் என மனதில் கொள்ளுங்கள்.