தமிழகத்தில் முதல் முறையாக கடந்த மார்ச் 7ஆம் தேதி முதல் ஏப்ரல் 16ஆம் தேதி வரை நடைபெற்ற 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழகத்தில் 8 லட்சத்து 63 ஆயிரத்து 668 பேர் எழுதினர். இந்நிலையில், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது.
இதில் 91.3 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர் 94.6 சதவிகிதமும், மாணவர்கள்87.4 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்களை விட மாணவியர் 7.2சதவிகிதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகள் 83.9 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது. 2,724 அரசு பள்ளிகளில் 188 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.
பாடம் வாரியாக தேர்ச்சி சதவிகிதம்:
1. இயற்பியல் 93%
2. வேதியல் 92.7%
3. உயிரியல் 96.9%
4. கணிதம் 95.2%
5. தாவரவியல் 89.3%
6. விலங்கியல் 91.8%
7. கணினி அறிவியல் 95.3%
8. வணிகவியல் 93.7%
9. கணக்குப்பதிவியல் 93.8%
10.புவியியல் 96.45%
11. வரலாறு 87.40%
முதல் மூன்று இடங்களை பிடித்த மாவட்டம்:
1. ஈரோடு 97.3%
2. திருப்பூர் 96.4%
3. கோயமுத்தூர் 96.2%
இந்த ஆண்டு தேர்வு எழுதிய 2729 மாற்றுத்திறனாளி மாணவர்களில் 2,450 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை 62 இதில் தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 45.
11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அவரவர் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களிலும் தேர்வு முடிவுகளை அறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 11 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தாலும் மறுதேர்வு வரும் வரை 12 ஆம் வகுப்பை தொடரலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதிப்பெண் பட்டியலை ஜூன் 4 ஆம் தேதி பிற்பகல் முதல் பெற முடியும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்கண்ட இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in