போட்டித் தேர்வுக்கான தயாரிப்பில் இருப்பவர்கள் பார்ப்பது, படிப்பது, கேட்பது என தேனீயாக செயல்பட்டால் மட்டுமே வெற்றி விரல் நுனியில் சாத்தியப்படும். அறிவை வளர்க்க எல்லை ஏது?.
வெற்றிக்கான சூத்திரம் இதுதான் என்று தனியாக இதுவரை எதுவும் எழுதி வைக்கப்படவில்லை. நீங்கள் எதிர்நோக்கிய, அல்லது அணுகும் வழிமுறையே உங்களுக்கான சூத்திரம் என்பதை நினைவில் கொள்க.
போட்டித் தேர்வுக்கான பயணம் ஒரு மாரத்தான் போன்றது நீண்ட பயணம்.. கடைசி வரை அயராமல் ஓடினால் ஒழிய வெற்றி சாத்தியமாகாது. உளவியல், அறிவு, தகுதி என மூன்றில் ஒன்று இல்லாமல் போனால் கூட வெற்றி வாய்ப்பு உடனடியாக கை மாறிவிடும்.
எனவே எல்லா விதத்திலும் தகுதிகளையும் வளர்த்து கொள்வது அவசியம். அந்த வகையில் போட்டித்தேர்வுகளுக்கான தயாரிப்பில் இருப்பவர்களுக்கான சில கேள்வி பதில் தொகுப்பு.
கேள்வி 1. "பக்ஷி தீர்த்தம்" என அழைக்கப்படும் இடம் எது?
விடை: திருக்கழுக்குன்றம்
விளக்கம்: 'காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள வேதகிரீஸ்வரர் திருக்கோயில் 1400 ஆண்டுகால தொன்மை வாய்ந்தது.
திருக்கழுக்குன்றம் திருமலைக் கோயிலின் ஒரு கல் மண்டபம் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் (கி.பி. 610-640) காலத்தில் கட்டப்பட்ட சிவனுக்குரிய குடைக்கூளி என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
திருமலையைச் சுற்றி பன்னிரு தீர்த்தங்கள் உள்ளன. அவை: 1. இந்திர தீர்த்தம், 2. சங்கு தீர்த்தம் (மார்க்கண்டேய தீர்த்தம்), 3. சம்பு தீர்த்தம், 4. நந்தி தீர்த்தம், 5. ருத்ர தீர்த்தம், 6. வஷிஷ்ட தீர்த்தம், 7. அகத்திய தீர்த்தம், 8. மெய்ஞ்ஞான தீர்த்தம், 9. கௌசிக தீர்த்தம், 10. வருண தீர்த்தம், 11. அகலிகை தீர்த்தம், 12. பக்ஷி தீர்த்தம்.
கேள்வி 2. ஆசியாவிலேயே மிக உயர்ந்த கோபுரம் கொண்ட கோவில் எது?
விடை: ஸ்ரீரங்கம்
விளக்கம்: ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோவிலின் முக்கிய கோபுரம் ஸ்ரீரங்கம் கோயிலின் வெள்ளை கோபுரம் ஆகும்.
இது இந்துக்களின் புனிதமான வழிபாட்டுதளமாகவும், இந்தியாவின் மிகப்பெரிய கோவில் வளாகத்திற்காகவும் புகழ்பெற்றது. கோவில் வலைத்தளத்தின்படி ஸ்ரீரங்கம், உலகின் மிகப்பெரிய இந்து ஆலயமாக கருதப்படுகிறது.
கேள்வி 3. சிந்து சமவெளி நாகரிகத்தில் அறிப்படாத மிருகம் எது?
விடை: குதிரை
விளக்கம்: இந்தியத் தொல்லியல் துறையின் தலைமை இயக்குநராக இருந்த சர் ஜான் ஹியூபர்ட் மார்ஷல் தலைமையில் 1921-ம் ஆண்டில் சிந்து பகுதியில் அகழ்வாராய்ச்சி தொடங்கியது.
மொகஞ்சதாரோ, ஹரப்பா பண்டைய நகரங்கள் அப்போதுதான் உலகின் வெளிச்சத்துக்கு வந்தன. சிந்து நதி பாய்ந்த சமவெளியை ஒட்டி ஆயிரக்கணக்கான ஊர்களில் நாகரிகம் தழைத்திருந்தது.
முக்கிய நகரங்கள்: மொகஞ்சதாரோ, ஹரப்பா (இரண்டும் பாகிஸ்தானில் உள்ளன), தோலாவிரா, லோத்தல் (இரண்டும் குஜராத் மாநிலத்தில் உள்ளன).
கேள்வி 4. அரபிக்கடலில் கலக்காத நதி எது?
விடை: மகா நதி
விளக்கம்: மகாநதி இந்தியாவின் கிழக்குப்பகுதியில் பாயும் ஒரு ஆறாகும். 860 கிமீ நீளம் உடைய இந்த ஆறு சாத்புரா மலைத்தொடர்களில் தொடங்கி கிழக்குத் திசையில் சத்தீஸ்கர் மற்றும் ஒரிஸா மாநிலங்களின் வழியாகப் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. ஹிராகுட் அணை இவ்வாற்றில் அமைந்துள்ளது
கேள்வி 5. நீரைவிட மிக லேசான எடை கொண்ட உலோகம் எது?
விடை: லித்தியம்
விளக்கம்: லித்தியம் வெள்ளி போன்ற தோற்றம் உள்ள மென்மையான ஒரு உலோகம். இது தனிம அட்டவணையில் 3 ஆவதாக உள்ளது.
இதன் அணுவெண் 3. இதன் அணுக்கருவில் மூன்று நேர்மின்னிகளும் நான்கு நொதுமிகளும் உள்ளன. இது மிகவும் மென்மையாக உள்ளதால், ஒரு கத்தியால் எளிதாக வெட்டலாம். லித்தியத்தின் அடர்த்தி, நீரில் பாதியளவு தான். லித்தியம் மின்கலங்களிலே பெருமளவு பயன்படுத்தப்படுகிறது.
கேள்வி 6. திரவ நிலையில் உள்ள உலோகம் எது?
விடை: பாதரசம்
விளக்கம்: பாதரசம் (Mercury) என்பது Hg என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதித் தனிமம் ஆகும். இதனுடைய அணு எண் 80. பாதரசம் ஒரு கனமான உலோகமாகும். வெள்ளியைப் போன்றே நிறம் கொண்டது.
கேள்வி 7. டீசல் ரயில் என்ஜின்கள் உற்பத்தி செய்யுமிடம் எது?
விடை: வாரணாசி
விளக்கம்: வாரணாசி என்று பெயர் சூட்ட காரணம் வருணா ஆறும் மற்றும் அசி ஆறும் வடக்கிலிருந்தும், தெற்கிலிருந்தும் பாய்ந்து பின் இந்நகரில் கங்கை ஆற்றில் ஒன்று கூடிவதால் வாரணாசி என்று அழைக்கப்படுகிறது.
வாரணாசியில் உள்ள டீசல் லோகோமோட்டிவ் வொர்க்ஸ் (DLW) என்பது இந்திய ரயில்வேக்கு சொந்தமான ஒரு உற்பத்தி பிரிவாகும். இங்கு டீசல் ரயில் என்ஜின்கள் மற்றும் அதன் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அரசு நிறுவனமானது வாரணாசி பி.ஹெச்.யூ. சாலையில் அமைந்துள்ளது.
கேள்வி 8. ரத்த தட்டை அணுக்கள் எதற்கு உதவுகிறது?
விடை: ரத்தம் உறைதல்
விளக்கம்: நம் உடலில் உள்ள ரத்தத்தின், ஒரு மைக்ரோ லிட்டரில் (ஒரு மில்லி லிட்டருக்கும் குறைவான அளவு), 1.5 முதல், 4.5 லட்சம் வரை தட்டை அணுக்கள் உள்ளன. இந்தத் தட்டை அணுக்கள் குறைந்தால் ஆபத்து.
உடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி 'பிளேட்லட்' அணுக்களுக்கு உண்டு.
கேள்வி 9. தேனிக்களால் பார்க்க இயலாத வண்ணம் எது?
விடை: சிவப்பு
விளக்கம்: தேனீக்கள் ஆறு கால்கள்(orthropods) கொண்ட பறக்கும் சிறு பூச்சி இனத்தில் ஒன்றாகும். தேனீக்களில் மொத்தம் 44 உள்ளினங்கள் உள்ளன. அறிவியலில் தேனீக்கள் ஏப்பிடே (Apidae) என்னும் குடும்பத்தில், ஏப்பிஸ் (Apis) என்னும் இனத்தைச் சேர்ந்தவை.
பூச்சி இனங்களில் தேனீக்கள் நிறங்களை சரியாக அடையாளம் கண்டு கொள்ள முடியும்.மனிதர்களை ஒப்பிடும் போது, தேனீக்களால் புற ஊதாக் கதிர்களையும் காண இயலும். ஒவ்வொரு பூக்களும் புற ஊதா கதிர்களின் எதிரொளிப்பு புள்ளிகளை (pigments) கொண்டிருக்கின்றன.
இவை மனித கண்களுக்கு புலப்படாத அளவு மிக நுண்ணிய ஒளிப் பகுதி ஆகும். ஆனால், தேனீக்களின் கூட்டுக் கண்கள் இவற்றை எளிதாக ஈர்த்து அவற்றை மூளைக்கு சமிக்ஞைகளாக அனுப்பி பூக்களின் மையப் பகுதியினை எளிதாக கண்டறிந்து விடுகிறது.
கேள்வி 10. பூஞ்சைகள் பற்றிய அறிவியல் பிரிவு எது ?
விடை: மைக்காலஜி
விளக்கம்: பூஞ்சைகளைப் பற்றிய அறிவியல் பிரிவுக்கு 'பூஞ்சையியல்' (mycology) என்று பெயர்.
பூஞ்சைகளிடம் 'க்ளோரோஃபில்' எனப்படும் பச்சையம் கிடையாது. எனவே, தாவரங்களைப் போல் உணவைத் தானே தயாரித்துக்கொள்ள இவற்றால் முடியாது.
பூஞ்சைகளின் உயிருள்ள உடலின் பெயர் 'மைசீலியம்' (mycelium) எனப்படும். பூமியில் 15 லட்சம் முதல் 50 லட்சம் வரை பூஞ்சை வகைகள் வாழ்கின்றன.