போட்டித் தேர்வை பொறுத்தமட்டில் மொழி அறிவு, பொது அறிவு, கணித அறிவு மிக முக்கியம். இந்த மூன்றும் இருந்தாலே யார் வேண்டுமானாலும் அரசு நடத்தும் குரூப் தேர்வுகளில் எளிதாக வெற்றி வாகை சூடலாம்.
எடுத்தோம், கவிழ்தோம் என போட்டித் தேர்வு அறிவிப்பு வந்த உடன் படிக்கத் தொடங்குவது எந்த விதத்திலும் பயன் அளிக்காது. இதற்கென தினமும் ஒரு மணி நேரமாவதுஒதுக்கி, அன்றாட நிகழ்வுகளை செய்தித்தாள் வாயிலாகவும், செய்திகள் வாயிலாகவும் அறிந்து கொள்வது சமயத்தில் கை கொடுக்கும். அந்தவகையில் தேர்வுக்கு தயார் செய்வதற்கான கேள்விகள் சில...
1. மாமல்லபுரத்தில் உள்ள ரதங்களின் எண்ணிக்கை எத்தனை?
விடை: 05
விளக்கம்: பிற்காலக் கோயில்களுக்கு மாதிரியாக பாறையை மேலிருந்து கீழ்நோக்கிச் செதுக்கி தோற்றுவிக்கப்பட்ட ஒற்றைக்கல், ரதம் என்று அழைக்கப்படுகிறது. இதன் மேல்பகுதி விமானம் என்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ரதக் கோயிலிலும் ஒரு கருவறை உண்டு. 1.தர்மராஜ ரதம், 2.பீம ரதம் 3.அருச்சுன ரதம், 4. திரௌபதை ரதம், 5.நகுல சகாதேவ ரதம்.
2. தமிழகத்தில் சிங்கவால் குரங்குகள் சரணாலயம் உள்ள இடம் எது?
விடை: முண்டந்துறை
விளக்கம்: இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் இதன் வால் சிங்கத்தின் வால் போன்று இருப்பதால் ஆங்கிலத்தில் இது Lion Tailed Macaque என்று அழைக்கப்படுகிறது.
தமிழில் 'சோலைமந்தி' எனவும் சிங்கவால் குரங்கு என்றும் அழைக்கப்படுகிறது. இவை களக்காடு, தேனி, பொள்ளாச்சி, வால்பாறை (தமிழ் நாடு), அமைதிப் பள்ளத்தாக்கு (கேரளா), குதிரேமுக்கு, சிர்சி-ஹொன்னவராமடிக்கேரி (கர்நாடகா), போன்ற பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றன.
3. தமிழகத்தில் கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனம் உள்ள இடம் எது
விடை: கோயம்புத்தூர்
விளக்கம்: 1912 ஆம் ஆண்டில் பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்டது. இந்தியாவின் சாகுபடி செய்யப்படும் கரும்பு வகைகளில் 90 சதவிகிதம் இந்நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.
நாட்டின் உள்ள ஒரே ஒரு கரும்பு ஆராய்ச்சி நிறுவனம் இது என்ற பெருமையை உடையது.
4. ரிசர்வ் வங்கி தேசிய மயமாக்கப்பட்ட தேதி?
விடை: ஜனவரி1,1949
விளக்கம்: 1935 இல் தொடங்கப்பட்ட ரிசர்வ் வங்கி 1949-இல் நாட்டுடைமை ஆக்கப்பட்டது.
இதுவே அரசின் கருவூலம். நாட்டின் செலாவணிக்குரிய நாணயத்தை வெளியிடுவதோடு, நாட்டின் பல பொருளாதார நடவடிக்கைகளை இயக்கி வருகிறது. இதன் தற்போதைய ஆளுநர் உர்ஜித் பட்டேல்.
5. தில்லி மெட்ரோ ரயில்வே தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
விடை: 2002
விளக்கம்: தில்லி மெட்ரோ என்பது தில்லி, மற்றும் குர்கோன், நோய்டா, காசியாபாத் ஆகிய தேசியத் தலை நகரப்பகுதிகளை இணைக்கிறது.
இது மொத்தம் 189.63 கி.மீ நீளத்திற்கு ஆறு பாதைகளையும் 142 நிலையங்களையும் கொண்டுள்ளது. இதன் வழித்தடங்கள் சுரங்கம் மற்றும் பாலம் போன்ற அமைப்புகளை கொண்டது.
6. கிழக்கு ரயில்வே தலைமையகம் எங்குள்ளது?
விடை: கொல்கத்தா
விளக்கம்: இந்திய ரயில்வேயின் 17 மண்டலங்களுள் ஒன்றாகும். இதன் தலைமையகம் கொல்கத்தாவில் பெர்லீ அரண்மனையில் செயல்படுகின்றது.
இது நான்கு கோட்டங்களை உள்ளடக்கியது. 1. ஹவுரா, 2. மால்தா, 3. சீல்டா 4. ஆசான்சோல்
7. நதிகள் இல்லாத நாடு எது?
விடை: சவுதி அரேபியா
விளக்கம்: சவூதி அரேபியா உலகில் அதிகளவு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் 2ஆம் இடத்தில் உள்ளது. அரசின் வருவாயில் 75 சதவிகிதம் இதன் மூலம் பெறப்படுகிறது.
மக்கா, மதீனா, ரியாத், தமாம், அல்-கோபர், ஜித்தா, தாயிப், யான்பு, அபஹா, அல்-கசீம், அல்-ஹஸா, அல்-ஹவுவ், அர்அர், ஜிஜான்,தபூக் ஆகியவை சவூதி அரேபியாவின் முக்கிய நகரங்கள்.
8. கர்நாடக இசையின் தந்தை எனப்படுபவர் யார்?
விடை: புரந்தரதாசர்
விளக்கம்: கர்நாடக சங்கீதம் உலகின் தொன்மையான இசை வடிவங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
கர்நாடக சங்கீதத்தின் தந்தை எனப்படும் புரந்தரதாசர் இசையைக் கற்றுக்கொடுக்கும் வழிமுறைகள் மற்றும் அதன் அடிப்படை கோட்பாடுகளை வகுத்தளித்தார்.
புரந்தரதாசர் 1484 ஆம் ஆண்டு கன்னட மாநிலத்தில் புரந்தடகட எனும் ஊரில் வரதப்ப நாயக்கருக்கும் கமலாம்பாளுக்கும் மகனாகப் பிறந்தார். இவரின் இயற்பெயர், ஸ்ரீனிவாச நாயக்.
9. தஞ்சை தமிழ்பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
விடை: 1981
விளக்கம்: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1981, செப்டம்பர் 15 ஆம் நாள் உருவாக்கப்பட்டது.
தஞ்சாவூரில் 972.7 ஏக்கர் நிலப்பரப்பில் இப்பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. தமிழ் மொழி, பண்பாடு போன்ற துறைகளில் உயர் ஆய்வை நோக்கமாகக் கொண்டது.
10. சோழர் கலைக்கு எடுத்துக்காட்டு?
விடை: தஞ்சை பெரிய கோவில்
விளக்கம்: தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் என்றும் தஞ்சைப் பெரிய கோயில் ("Big temple") அல்லது தஞ்சைப் பெருவுடையார் கோயில் ("Peruvudayar Temple") என்றும் அறியப்படுகிறது.
இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்று. கிபி 11-ஆம் நூற்றாண்டில் முதலாம் இராஜராஜ சோழன் இக்கோயிலைக் கட்டினார். 2010 ஆம் ஆண்டோடு 1000 ஆண்டு நிறைவடந்தது கம்பீரமாக காட்சி அளிக்கிறது.