சென்னை : அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் சீருடையில் மாற்றம் கொண்டு வரப்படுமா என்ற குழப்பநிலை பெற்றோர்கள் மத்தியில் நீடித்து வருகிறது.
சமீபகாலமாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத் தேர்வுகளின் தேர்வு முடிவுகள் வெளியானபோது, ரேங்க் பட்டியல் வெளியிடக்கூடாது என அறிவிப்பு வெளியிட்டனர்.
இதனைதொடர்ந்து 11ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மூன்று வகையான சீருடைகள்
இது தவிர அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான சீருடையிலும் மாற்றம் கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஒரு சீருடையும், 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை ஒரு சீருடையும், 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு ஒரு சீருடையுமாக மொத்தம் மூன்று வகையான சீருடைகள் அமைக்கப்படும் என சொல்லப்பட்டது.
மாணவர்களிடையே குழப்பம்
தற்போது, பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால், இப்பள்ளிகளில் சேர்ந்து பயிலும் மாணவ, மாணவியர்களில் அரசு வழங்கும் இலவச சீருடை தவிர்த்து தனியாக சொந்தமாக சீருடை வாங்கும் மாணவர்கள் மத்தியில் தற்போது குழப்ப நிலை நீடித்து வருகிறது.
பெற்றோர்கள் கவலை
இன்னமும் எந்தவகையான சீருடை என அரசு அறிவிக்காததால், புதிய சீருடை வாங்கிய அதேநேரத்தில் சீருடையில் மாற்றம் ஏற்பட்டால் மீண்டும் புதிய சீருடையை வாங்க நேரிடுமே என்ற கவலை பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
வழக்கமான சீருடை
இதனால் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு புதிய சீருடை வாங்காமல் இருக்கிறார்கள். இதுவரை சீருடை மாற்றம் பற்றி அரசிடம் இருந்து எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. அதனால் மாணவ மாணவியர்கள் தங்களுடைய வழக்கமான சீருடைகளையே பள்ளிக்கு அணிந்து செல்கிறார்கள்.