இன்றைய கல்வி என்பது அறிவைத் தேடுவதல்ல.. பணம் சம்பாதிப்பதற்கான வழியைத் தேடுவது மட்டுமே என்றாகிவிட்டது.
எனவே அறிவுத் தேடலுக்கு உதவும் பல பாடங்கள், பிரிவுகள் பள்ளி, கல்லூரிகளில் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன.
அவற்றில் முக்கியமானவை ஹிஸ்டரி குரூப் எனப்படும் வரலாற்றுப் பிரிவு, அட்வான்ஸ் தமிழ் எனப்படும் சிறப்பு தமிழ்ப் பிரிவு, புவியியல் பிரிவு போன்றவை.
இவை சில அரசுப் பள்ளிகளில் மட்டுமே இன்று உள்ளன. எந்தத் தனியார் பள்ளியிலும் இல்லை எனும் நிலைதான் உள்ளது.
இன்று பெருமளவு பள்ளிகளில் கணிதம் - உயிரியல் பிரிவு, வணிகவியல் - வணிகக் கணக்கு, கணிணி அறிவியல் - கணக்கு போன்றவரை மட்டுமே உள்ளன. சில பள்ளிகளில் வொகேஷனல் எனும் தொழில் கல்வி வைத்திருக்கிறார்கள். இதன் மூலம் அதிக மதிப்பெண்கள் பெற முடியும் என்பதால் மாணவர்களை இதில் சேரச் சொல்லி வற்புறுத்துகிறார்கள்.
சில தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளில் செவிலியர் படிப்புக்கான பிரிவும் உள்ளது.
எங்கே வரலாறு?
ஆனால் எந்தத் தனியார் பள்ளியிலும் வரலாற்றுப் பிரிவே இல்லை எனும் நிலை உருவாகிவிட்டது. அதேபோல தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் எதிலும் வரலாறு, பொருளாதாரம், தமிழ், அரசியல் அறிவியல், பொது நிர்வாகவியல் போன்ற கலை சார்ந்த பிரிவுகளே இல்லை.
பிகாம், பிஏ கார்ப்பொரேட் செக்ரட்டரிஷிப், பிஏ ஆங்கிலம் போன்ற பிரிவுகளை மட்டுமே பெரும்பாலான தனியார் கல்லூரிகள் வைத்துள்ளன.
அரசுக் கல்லூரிகள் மற்றும் ஆரம்ப நாட்களில் தொடங்கப்பட்டு அரசு உதவியுடன் நடக்கும் தனியார் கல்லூரிகளில் மட்டுமே வரலாறு, பொருளாதாரம், தமிழ், அரசியல் அறிவியல், பொது நிர்வாகவியல், புவியியல், புள்ளியியல், உளவியல் போன்ற பிரிவுகள் உள்ளன.
மாநிலக் கல்லூரி
சென்னை மாநிலக் கல்லூரி போன்ற வெகு சில பாரம்பரியமிக்க அரசுக் கல்லூரிகளில்தான் அனைத்து மொழியியல் பாடப் பிரிவுகளும் உள்ளன. இங்கு தமிழ் மட்டுமல்ல ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, உருது, மலையாளம் போன்ற மொழிகளுக்கான பிரிவுகளும்கூட உள்ளன.
பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஆர்ட்ஸ் க்ரூப் எனப்படும் கலைப் படிப்பு பிரிவுகள் இல்லாமல் போனதால், இன்றைக்கு வரலாறு போன்ற துறைகளில் மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கையே வெகுவாகக் குறைந்துவிட்டது.
ஒரு சமூகத்தின் இருப்பை தலைமுறைகள், நூற்றாண்டுகள் தாண்டி உலகுக்குச் சொல்லும் வரலாறு, மொழியின் தொன்மையை அறிந்து அதை உயிர்ப்பிக்க உதவும் மொழியியல் பாடப் பிரிவுகள் வழக்கொழிந்து வருவது சரிதானா?
அரசும் கூட காரணம்தான்
இந்த நிலைக்கு அரசின் மெத்தனமும் கண்டும் காணா தன்மையும்கூட ஒரு முக்கிய காரணம் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கலை சார்ந்த படிப்புகளை ஒழித்துவிடலாம் என முந்தைய காலங்களில் திமுக, அதிமுக அரசுகள் ஒரு யோசனையை முன்வைக்க, தனியார் பள்ளி, கல்லூரிகள் இந்த படிப்புகளை அடியோடு ஒழிக்க ஆரம்பித்தது நினைவிருக்கலாம்.
சரி, வரலாறு, தமிழ் படிச்சா வேலை வாய்ப்பிருக்கா.. சம்பாதிக்க முடியுமா? என்ற கேள்வி எழுகிறதல்லவா.. அதற்கான விடை, அடுத்த கட்டுரையில்...