சென்னை : கேட் தேர்வு எனப்படும் பொறியியல் பட்டதாரி திறனறி தேர்வு இந்திய அறிவியல் கழகம் மற்றும் ஏழு இந்திய தொழில் நுட்பக் கழகங்களும் இணைந்து நடத்தும் தேர்வாகும். கேட் தேர்வு தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வாகும். கேட் தேர்வு ஐஐஎஸ்சி மற்றும் ஐஐடிக்கள் போன்ற தொழிற் நுட்பக் கல்லூரிகளில் எம்டெக், எம்இ மற்றும் பிஹெச்டி போன்ற மேற்படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் தேர்வாகும்.
கேட் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பல்வேறுப்பட்ட மேற்படிப்புகளில் சேருவதற்கு தகுதிப் பெறுவார்கள். மேலும் நாட்டின் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களில் அரசு கல்வி நிதி உதவிகளைப் பெறவும் முடியும்.
கேட் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் ஐஐஎஸ்சி மற்றும் ஐஐடி போன்ற தொழில்நுட்பக் கல்லூரிகளில் பொறியியல் தொழில்நுட்பம், கட்டிடக்கலை மற்றும் மருந்துகளியல் ஆகியவற்றில் இளங்கலைபடிப்பு மற்றும் முதுகலைப் படிப்பு ஆகியவற்றில் சேர்ந்துப் படிக்கலாம். மேலும் அறிவியல், கணிதம், புள்ளியியல் மற்றும் கணிணி ஆகியவற்றில் முதுகலைப் படிப்பில் சேர்நதும் படிக்கலாம். கல்விநிதியுதவி பெற அக்கல்விச்சாலையின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பட்டமேற்படிப்பில் சேர்ந்திருக்க வேண்டும்.
மேற்படிப்புகளுக்கு விண்ணப்பதாரர்கள் சேர்க்கப்படும் போது குறைந்தபட்சம் 70 சதவீத மதிப்பெண்கள் அவர்கள் கேட் தேர்வில் பெற்ற ரேங்கின் அடிப்படையிலும் மீதியுள்ள 30 சதவீத மதிப்பெண்கள் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தால் வைக்கப்படும் தேர்வு, நேர்முகத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் சேர்க்கப்படுவார்கள். பொதுத்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்புக்காகவும் கேட் தேர்வை பயன்படுத்துகின்றன.
சில கல்வி நிறுவனங்கள் பட்டய மேற்படிப்பில் சேர்ந்து படிப்பதற்கு கேட் தேர்வு கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனக் கூறுகிறது. மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு (சிஎஸ்ஐஆர்) நிறுவனங்களில் இளநிலை ஆய்வாளர் உதவிக்கும் அவர்கள் அரவணைக்கும் திட்டங்களின் ஆய்வாளருக்கும் கேட் தகுதி தேவைப்படுகிறது.
சில அரசு நிறுவனங்களில் கூட பொறியாளர் மற்றும் அறிஞர் வேலையிடங்களுக்கு தேர்வு செய்யும் போது கேட் தகுதிக் கட்டாயம் இருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. சிங்கப்பூரிலுள்ள பல பல்கலைக் கழகங்களிலும் கேட் தேர்வினை அடிப்படையாகக் கொண்டே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
கேட் தேர்வில் 2017ம் வருடத்தின் மாற்றங்கள் -
பொறியியல் அறிவியல் பாடப்பிரிவில் வளிமண்டல மற்றும் கடல் அறிவியல் என்ற புதிய பகுதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பங்களாதேஷ், நேபாளம், இலங்கை, எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த பன்னாட்டு மாணவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என கேட் ஒருங்கிணைந்த தேசிய வாரியம் அறிவித்துள்ளது.