சென்னை : ஆஸ்திரேலியாவின் இந்த அதிரடி நடவடிக்கையால் 457 விசா'வை பயன்படுத்தி தற்காலிகமாக பணியாற்றி வந்த வெளிநாட்டு பணியாளர்கள் 95,000 பேர் பாதிக்கப்படவுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவில் உள்ள வேலைவாய்ப்பின்மையை சரிசெய்வதற்காகத்தான் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா பிறநாட்டினர் தங்கி வேலை செய்வதற்கான நாடுதான். ஆனால் இங்குள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான் 457 விசா ரத்து அறிவிக்கப்பட்டுள்ளது என ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் கூறியுள்ளார்.
457 விசா
457 விசா திட்டத்தின் மூலம் வெளிநாட்டுப் பணியாளர் ஆஸ்திரேலியாவில் தங்கி பணிபுரிந்து வந்தனர். அந்நாட்டு அரசு வெளிநாட்டு பணியாளர்கள் 4 ஆண்டுகள் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை செய்வதற்கு ஏற்ற வகையில் 457 விசா திட்டம் என்ற பெயரில் விசாக்கள் வழங்கி வந்தது. இந்த விசாக்கள் மூலம் இந்தியர்கள் மற்றும் சீனர்கள்தான் அதிக அளவில் பயன்பெற்று வருகின்றனர்.
திறமைவாய்ந்த தொழிலாளர்கள்
இந்திய ஐடி ஊழியர்கள் பாதிக்கும் வகையில் நடவடிக்கையில் இறங்கிய நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் அடுத்து ஆஸ்திரேலியா இடம்பெற்று உள்ளது. ஆஸ்திரேலியா, தனது நாட்டில் திறமையான தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை காரணமாக திறமைவாய்ந்த வெளிநாட்டு தொழிலாளர்களை வரவேற்றது.
ஆஸ்திரேலியாவின் அதிரடி நடவடிக்கை
கடந்த ஆண்டு நிலவரப்படி ஆஸ்திரேலியாவில் இந்த ‘457 விசா' திட்டத்தின் கீழ் வெளிநாடுகளை சேர்ந்த 95 ஆயிரத்து 758 பேர் வசிக்கின்றனர். இவர்களில் 24.6 சதவீதம்பேர் இந்தியர்கள்தான். அடுத்த இடங்களை இங்கிலாந்தும், சீனாவும் பெறுகிறது. இந்த விசாக்களை பயன்படுத்தி இந்தியாவில் இருந்து சென்று ஐ.டி. என்னும் தகவல் தொழில் நுட்பத்துறை, மருத்துவத்துறை, விருந்து உபசரிப்பு (ஓட்டல்) துறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியர்கள் அதிகளவில் பலன் பெற்றுவந்த ‘457 விசா' திட்டத்தை திடீரென ரத்து செய்து ஆஸ்திரேலியா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்திய அரசு ஆய்வு
இந்நிலையில் ஆஸ்திரேலியா 457 விசா' நகர்வின் விளைவுகளை இந்தியா ஆய்வு செய்து வருகிறது என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது. மத்திய அரசு ஆஸ்திரேலிய அரசின் விசா நடைமுறையினால் ஏற்படும் விளைவுகள் குறித்து அரசு ஆய்வு செய்து வருகிறது. ஆய்வின் முடிவில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக விசா
ஆஸ்திரேலியாவில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்பதால் வெளிநாட்டு பணியளர்களின் 457 விசா தடை செய்யப்பட்டுள்ளது. '457 விசா திட்டத்துக்கு பதிலாக வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு கட்டுபாடுகளுடன் கூடிய மற்றொரு தற்காலிக விசா முறை அறிவிக்கப்பட இருப்பதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.