சென்னை : 2017-2018ம் ஆண்டு கால்நடை மருத்துவப் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 30ந் தேதி வெளியிடப்படும் என கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திலகர் தெரிவித்துள்ளார்.
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள இளநிலை பட்டப்படிப்புகளுக்கான 360 இடங்களுக்கு பிளஸ்2 மதிப்பெண் அடிப்டையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பிக்க மே 15ந் தேதி முதல் ஜூன் 5ந் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது.
ஜூன் மாதம் 30ந் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை மாதம் 19, 20 மற்றும் 27ந் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தரவரிசைப் பட்டியல்
360 கால்நடை மருத்துவ படிப்பு இடங்களுக்கு ஆன்லைன் மூலம் 23 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 30 வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் இடங்கள்
இந்த கல்வி ஆண்டில், சென்னை, நெல்லை ஒரத்தநாடு ஆகிய இடங்களில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிகளில் தலா 20 இடங்களும், ஒசூர் கோழியின் உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரியில் 20 இடங்களும் என மொத்தம் 80 இடங்களுக்கு தமிழக அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தால் இந்த கல்வியாண்டிலேயே கூடுதல் இடங்களுக்கும் மாணவர் சேர்கை நடைபெறும்.
புதிய பாடத்திட்டம்
கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன்படி கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புக்கான காலம் கூடுதலாக 6 மாதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
6 மாத காலம் அதிகரிப்பு
இதுவரை 5 வருடம் இருந்த கால்நடை மருத்துவப் படிப்பு வருகிற கல்வியாண்டு முதல் 5 1/2 ஆண்டாக மாறுகிறது. இதனை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் திலகர் தெரிவித்துள்ளார்.