சென்னை : பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு இன்று தமிழகத்தில் நடைபெறுகிறது. இதில் 5.03 லட்சம் பேர் தேர்வினை எழுதுகிறார்கள்.
ஆசிரியர் தகுதிக்கான இரண்டாம் தாள் தேர்வு இன்று நடைபெறுகிறது. தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை நடைபெறுகிறது. காப்பியடித்தல் மற்றும் ஆள்மாறாட்டம் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை அளிக்கப்படும் மேலும் மூன்று தேர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும், டெட் தேர்வுக்கு 7.40 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கான, முதல் தாள் தேர்வினை 598 மையங்களில், 2.37 லட்சம் பேர் நேற்று எழுதினார்கள்.
இன்று 10ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு, இரண்டாம் தாள் தேர்வு, 1,561 மையங்களில் நடக்கிறது. இதில் 5.03 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். தேர்வில் காப்பியடிப்பதை தடுக்க, 3,000 ஆசிரியர்கள் இடம் பெற்ற, பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
18 ஆயிரம் ஆசிரியர்கள் கண்காணிப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு கண்காணிப்பாளர்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு அறைக்கு செல்போன் மற்றும் கணக்கிடும் கருவி ஆகியவற்றை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.