சென்னை: இந்திய சிவில் சர்வீசஸ் தேர்வில் கோவையைச் சேர்ந்த டி.சாருஸ்ரீ அகில இந்திய அளவில் ஆறாவது இடமும் தமிழகத்தில் முதலிடமும் பிடித்துள்ளார். கல்வித்துறையில் மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என்பது தனது விருப்பம் என்று தெரிவித்தார் அவர்.
2014-ஆம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். உள்ளிட்ட இந்திய சிவில் சர்வீஸஸ் பணிகளுக்கான நேர்முகத் தேர்வு முடிவுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) நேற்று வெளியிட்டது. இந்தத் தேர்வில் தமிழகத்திலிருந்து 118 பேர் உள்பட மொத்தம் 1,236 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்தத் தேர்வில் அகில இந்திய அளவில் ஆறாமிடமித்தை சாருஸ்ரீ பெற்றுள்ளார். இவர் கோவையைச் சேர்ந்தவர்.
இந்திய வனத் துறைப் பணி பயிற்சிக்காக டேராடூன் சென்றுள்ளார். தேர்வில் வெற்றி பெற்றது தொடர்பாக அவர் தொலைபேசியில் கூறியது:
நான் சென்னை அண்ணா பல்கலைக்கழக்தில் இ.சி.இ. பிரிவில் 2012-ஆம் ஆண்டு பட்டம் பெற்றேன். படிப்பு முடித்ததும் குவால்கம் என்ற நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றிக்கொண்டே, கிடைத்த நேரத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்காகப் படித்து வந்தேன். முதல் முயற்சியில் சுங்கத் துறை அதிகாரி பணி கிடைத்தது. அதன் பிறகு, வனத்துறை அதிகாரி தேர்வில் வெற்றி பெற்றதும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பயிற்சியில் இணைந்தேன். எப்படியும் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறுவது என்ற உறுதியுடன் படித்து வந்தேன்.
இப்போது, எனது இரண்டாவது முயற்சியில் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி கிடைத்துள்ளது. கல்வித் துறையில் நிறைய மாற்றங்களைக் கொண்டுவர விரும்புகிறேன். போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் விடாமுயற்சியுடன் தொடர்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். என்னைப் போன்றே ஏராளமாண மாணவ, மாணவிகள் விடா முயற்சியுடன் படிக்கவேண்டும். நான் இரண்டாவது முயற்சியிலேயே வெற்றி கண்டது போல மற்றவர்களுக்கும் இந்த வெற்றி கிடைக்கலாம். அதனால் தொடர்ந்து வெற்றிக்காக முயற்சி செய்வது நலம் என்றார் அவர்.
இவரது தந்தை தியாகராஜன், வேளாண் துறையில் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது தாயார் குமுதா.