சென்னை : குழந்தைகள் உண்மையாகவும், நேர்மையாகவும், ஒழுக்கமாகவும் வளர பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி இங்கே பார்ப்போம்.
எந்தக்குழந்தையும் நல்லக்குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பிலே என்பர் அதுபோல குழந்தைகளின் வளர்ச்சி அவர்களை சுற்றியுள்ள சூழலைப் பொறுத்தே அமைகிறது.
குழந்தைகள் நல்ல பழக்கங்களுடன் ஒழுக்கமாக வளர வேண்டுமானால் பெற்றோர்கள்தான் அவர்களுக்கு சிறந்த முன் மாதிரியாக திகழ வேண்டும். உதாரணமாக பிள்ளைகளை கத்தக் கூடாது, எனக் கூறிவிட்டு, அவர்கள் ஏதாவது சிறு தவறு செய்து விட்டால் நாமே கத்தி ஏன் இப்படி செய்தாய் என அவர்களிடம் முரட்டுத் தனமாக நடந்துக்க கூடாது.
குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
1. 5 வயதில் வளையாதது ஐம்பதில் வளையாது. ஆனால் அன்பு என்ற சொல் அனைவரையும் எப்போது வேண்டுமானாலும் வளைத்து விடும். குழந்தைகளுக்கு முடிந்த வரையில் சிறுவயதிலேயே நிறைய நல்ல விஷயங்களை கொஞ்சம் கொஞ்சமாக பெற்றோர்கள் அவர்களுக்குள் விதைக்க வேண்டும்.
2. பொய் சொல்லாமல் குழந்தைகள் இருக்கனும்னா முதல்ல பெற்றோர்கள் குழந்தைகள் முன் பொய் சொல்லக் கூடாது. முடிந்தவரை அவர்களிடம் உண்மையை மட்டுமே பேச வேண்டும். உதாரணமாக அப்பாவுக்கு வேண்டாத போன் கால் வந்துச்சுன்னா அம்மாவை போன் எடுக்கச் சொல்லி நான் இல்ல வெளியே போயிருக்கேன் சொல்லு அப்படின்னு அப்பா சொல்லும் போது அதைப் பார்க்கும் குழந்தையும் பொய் சொன்னா தப்பு இல்லன்னு நினைக்கும்.
3. முடிந்தவரை குழந்தைகள் முன் பெற்றோர்கள் உண்மையாகவும், நேர்மையாகவும், அன்பாகவும், அமைதியாகவும் நடந்து கொள்ள வேண்டும். சில வீடுகளில் பெற்றோர்கள் ஒருவருக்கொருவர் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டு கத்திக் கொண்டே இருப்பார்கள். அதைப் பார்த்து வளரும் குழந்தைகளும் அப்படித்தான் வளருவார்கள்.
4. குழந்தையை மட்டும் கத்தாதே என சொல்வதில் அர்த்தமில்லை. குழந்தைகள் தவறு செய்தால் அவர்களிடம் அன்பாக இதை செய்யக் கூடாது இதனால் இந்த விளைவு ஏற்படும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் கூறி புரிய வைக்க வேண்டும்.
5. அவர்கள் குழந்தை பருவத்தில் செய்யும் குட்டி குட்டித் தவறுகளை கண்டுகொள்ளமாலும் விடக்கூடாது. அதே நேரத்தில் ஓயாம திட்டிக்கிட்டும் இருக்கக் கூடாது. இதை செய்யாதே, அதை செய்யாதே என எப்போதும் சொல்வதை விட இதை செய் என்று முடிந்த வரையில் குழந்தைகளிடம் நேர்மறையாக பேசுங்கள்.
6. ஹோம் ஒர்க் செய்யலன்னா விளையாட விட மாட்டேன் சொல்லாதீங்க. ஹோம் ஒர்க் செய்த உடனே போய் நல்ல விளையாடலாம் எனக் கூறுங்கள். ஹோம் ஒர்க்கில் அவர்களுக்கு உதவுங்கள். அவர்கள் செய்கின்ற நல்ல விஷயங்களை ஊக்குவியுங்கள்.
7. உங்கள் குழந்தைக்கு எதில் ஆர்வம் அதிகம் என்பதை தெரிந்து கொண்டு அதில் அவர்கள் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள உங்களால் முடிந்தவற்றை செய்யுங்கள். அதில் அவர்கள் ஆர்வத்தை அதிகப்படுத்துங்கள்.
8. குழந்தையை அதிகமாக கண்டிக்கும் போது அம்மா, அப்பா திட்டுவார்கள் எனப் பயந்து பொய் சொல்லத் தொடங்குகிறார்கள். அதனால் குழந்தைகளை வளைப்பதாக நினைத்து அவர்கள் வாழ்வினை ஒடித்து விடக்கூடாது. உண்மையை பேச வேண்டும். அதனால் வருகின்ற நன்மைகள் பற்றி குழந்தைகளுக்கு விளக்க வேண்டும்.
9. பெரும்பாலான குழந்தைகள் சரியான அன்பு மற்றும் அரவணைப்பு இல்லாததால்தான் தவறுகிறார்கள். குழந்தைகள் அன்புக்கும், பாராட்டுக்கும் ஏங்குபவர்கள் அவர்களிடம் அன்பாகவும், அக்கறையாகவும், பாராட்டும் பெற்றோராகவும் நடந்து கொள்ளுங்கள்.
10. குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோர்களை பார்த்துத்தான் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்கிறார்கள். அதனால் பெற்றோர்கள் உங்கள் குழந்தையின் எதிர்காலம் இனிமையாக அமைய இணைந்து செயல்படுங்கள்.
இந்தியாவின் எதிர்காலம் குழந்தைகள்தான். இந்தியாவின் எதிர்காலம் ஒளிமயமானதாக அமைய நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம்.