சென்னை : விழுப்புரம், தர்மபுரி ராமநாதபுரம் ஆகிய பகுதிகளைச் சுற்றி சட்டக் கல்லூரிகள் இல்லாததால் அங்குள்ள மாணவ மாணவியர்கள் சட்டம் படிப்பதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள்.
ஒரு சில மாணவர்கள் மட்டுமே வேறு இடங்களுக்குச் சென்று சட்டம் பயில்கிறார்கள் என அரசுக்கு சட்டக்கல்வி இயக்குனர் கடிதம் எழுதியிருந்தார்.
அந்தக் கடிதத்தை அரசு ஏற்றுக் கொண்டு விழுப்புரம், தர்மபுரி ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் 2017-2018ம் ஆண்டு புதிய மூன்று சட்டக் கல்லூரிகளை தொடங்குவதற்கு உத்தரவிட்டுள்ளது. அதற்கான ஆரம்பக் கட்ட வேலைகளையும் தொடங்கியுள்ளது.
முதலாம் ஆண்டில் 80 மாணவர்கள் சேர்க்கை
விழுப்புரம், தர்மபுரி ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் 2017-2018ம் ஆண்டு முதல் அரசு சட்டக்கல்லூரி தொடங்க அரசாணை முதலமைச்சரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி 3 ஆண்டு சட்டப் படிப்பில் முதலாம் ஆண்டு 80 மாணவர்களும், 5 ஆண்டு சட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு 80 மாணவர்களும் சேர்க்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனி அலுவலர்கள் நியமனம்
சட்டக்கல்லூரி அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை மேற்கொள்ள தனி அலுவலர்களை நியமித்து அரசு உத்தரவிடுகிறது. விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி தொடங்குவதற்காக திருச்சி அரசு சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர் எஸ்.முருகேசன், தர்மபுரி அரசு சட்டக்கல்லூரிக்காக கோவை அரசு சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர் ப.சிவதாஸ், ராமநாதபுரம் அரசு சட்டக்கல்லூரிக்காக திருநெல்வேலி அரசு சட்டக்கல்லூரி உதவி போராசிரியர் என்.ராமபிரான் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
இந்திய பார் கவுன்சில் ஒப்புதல்
நியமிக்கப்பட்டவர்கள் கல்லூரிகளைத் தொடங்கும் பணிகள் குறித்த அறிக்கையை சட்டக்கல்வி இயக்குனர் வழியாக அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும். இந்த அரசு சட்டக்கல்லூரிகளுக்கு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டபபல்கலைக்கழகத்தின் இணைவு மற்றும் இந்திய பார் கவுன்சிலின் ஒப்புதல் ஆகியவற்றை பெற சட்டக்கல்வி இயக்குனர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கல்லூரிகளுக்கு தோற்றுவிக்கப்பட வேண்டிய ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்கள், நூலக புத்தகங்கள், கம்ப்யூட்டர், தளவாட பொருட்கள், தொடரும் மற்றும் தொடரா செலவினம் ஆகியவை குறித்த விவரங்களை அரசு சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஆணை ரூ. 6,81 கோடி நிதி
ஒரு சட்டக்கல்லூரிக்கு ரூ. 2.27 கோடி வீதம் 3 கல்லூரிகளுக்கு மொத்தம் ரூ. 6,81 கோடி நிதி ஒப்பளிப்பு செய்து ஆணைகள் பிறப்பிக்க வேண்டும் என்றும் அரசுக்கு சட்டக்கல்வி இயக்குனர் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தை அரசு ஏற்றுக் கொண்டு அவர் கேட்டுக் கொண்ட தொகையை அனுமதித்து அரசு ஆணையிடுகிறது. அதோடு, ஆசிரியர் மற்றும் நிர்வாக பணிகளுக்கான இடங்களை தோற்றுவித்து அரசு ஆணையிடுகிறது என தமிழ அரசின் சட்டத்துறை செயலாளர் (பொறுப்பு) பூவலிங்கம் தெரிவித்துள்ளார்.