சென்னை : அரசுப் பள்ளிகளைப் பொருத்தவரை மாணவர்கள் சேர்கை என்பது மிகவும் குறைவானதாகவே உள்ளது. ஏன் அரசு வேலைக்காக ஆசைப்படுபவர்கள் அரசு பள்ளி என்றால் அலறி அடித்து ஓடுகிறார்கள்.
அரசுப்பள்ளி என்றாலே அலர்ஜி வந்தது போல் ஏன் மக்கள் பார்க்கிறார்கள். அரசுப்பள்ளிகளில் முக்கியமாக சுகாதாரப் பிரச்சனைகள் காணப்படுகின்றன.
அரசுப்பள்ளிகளிலும் பாடத்திட்டங்கள் உயர்த்தப்பட்டு உள்கட்டமைப்பு வசதிகள் சீர்செய்யப்பட்டு, குடிநீர் வசதிகள், கழிவறை வசதிகள், சத்துணவு வசதிகள் போன்ற வசதிகள் மறுசீரமைக்கப்படும் போது கட்டாயம் அரசுப்பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை அதிகமாகும்.
மாணவர் சேர்க்கை
உத்திரப்பிரதே மாநிலத்தைப் போல நம்ம மாநிலத்திலும் அனைத்துப் பள்ளிகளும் அரசுடைமையாக்கப்பட்டால் கட்டாயம் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகப்படுத்தப்படும். அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடைகளிலும் மாற்றம் வரவேண்டும். அவர்களும் பள்ளிக்கு சூ, சாக்ஸ் போட்டு நீட்டாக உடை அணிந்து செல்லவேண்டும் என்பதை ஆசிரியர்கள் வலியுறுத்த வேண்டும்.
கழிவறை வசதிகள்
அரசுப்பள்ளிகளில் கழிவறை வசதி மிகவும் மோசமாக உள்ளதால் பலரும் குற்றம் சாட்டுகின்றனர். பல உயர்நிலைப் பள்ளிகளில் மாணவ மாணவியர்கள் அரசுப்பள்ளியில் கழிவறை வசதி மோசமாக இருப்பதால் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.
அடிப்படை வசதிகள்
உணவு, குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகளை மாணவர்களுக்கு தரமான முறையில் வழங்குவது மிகவும் அவசியமான ஒன்றாகும். அரசுப்பள்ளி மாணவ்ர்கள் கழிவறை சரியில்லாததால் சரியாக தண்ணீர் குடிப்பதில்லை. குடித்தால் கழிவறைக்கு செல்லனுமேன்னு தண்ணீர் குடிக்காமல் இருக்கிறார்கள். இது அவர்கள் உடல்நிலையை மோசமாக பாதிக்கும் என்பதில் ஐயமில்லை.
வசதிகளை சீர்செய்தல்
அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்கள் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளை கண்காணித்து அங்குள்ள அடிப்படை வசதிகளை சீர் செய்தால் கட்டாயம் அரசுப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை குவியும்.
தரம் உயர்த்தப்பட வேண்டும்
அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிடும் மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா, குடிநீர் வசதி, மற்றும் கழிவறை வசதி, வகுப்பறை வசதி போன்றவற்றை அந்தந்த மாவட்டத்தைச் சார்ந்த கலெக்டர், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர், மாவட்டக்கல்வி அலுவலர் ஆகியோர் ஆய்வு செய்து அரசுப்பள்ளியின் தரத்தை உயர்த்த வேண்டும்.
அரசு கல்லூரிகளில் முன்னுரிமை
மேலும் அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர்கள் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரியில் சேரும் போது அவர்களுக்கு அரசுக் கல்லூரிகளில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அரசு இடஒதுக்கீட்டிலும், முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அரசுப்பள்ளி மாணவர்களாலும் உயர்க்கல்வியில் சேர்ந்து படிக்கின்ற வாய்ப்புகள் உருவாகும். மேலும் அரசுப்பள்ளியில் படிப்பவர்களுக்கு அரசு வேலையிலும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். இந்த வாய்ப்புகளை உருவாக்கும் பொறுப்பு தமிழக அரசின் கையில்தான் உள்ளது.