சென்னை : நீட் தேர்வில் கேள்வித்தாள் பாரபட்சமாக இருந்ததாக மதுரை ஐகோர்ட்டில் கடந்த மாதம் 24ந் தேதி வழக்கு தொடரப்பட்டது. இதனால் நீட் தேர்வு முடிவை வெளியிட இடைக்கால தடை விதித்த மதுரை ஐகோர்ட்டு இது தொடர்பாக பதில் அளிக்குமாறு சிபிஎஸ்இக்கு உத்தரவிட்டது.
இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 10 மொழிகளில் தேர்வு நடந்தது. நாடு முழுவதும ஒரே நேரத்தில் நீட் தேர்வு நடக்கும் போது பிராந்திய மொழிகளில் வழங்கப்பட்ட வினாத்தாள்களில் ஒரே மாதிரியான வினாக்கள் கேட்கப்படவில்லை என வழக்கு தொடரப்பட்டது.
இதுக்குறித்து மதுரையை சேர்ந்த 9 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி எம். வி. முரளிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் வக்கீல் கே.ஆர்.லட்சுமணன் ஆஜராகி நீட் தேர்வு தொடர்பாக ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுகுறித்து சிபிஎஸ்இ பதில் அளிக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் சிபிஎஸ்இ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் இந்த வழக்கில் எந்த முடிவும் எடுக்க முடியாது என்றார். இதனால் நீட் தேர்வு முடிவு வெளியிட இடைக்கால தடை விதித்து மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.
ஆனால் இது தொடர்பாக உச்ச நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று உச்ச நீதி மன்றம் 11 லட்சம் மாணவ மாணவியர்களின் நலனைக் கருதி நீட் தேர்வு முடிவை வெளியிடலாம் என சிபிஎஸ்இக்கு உத்தரவிட்டது.
மேலும் மாநில உயர்நீதி மன்றங்கள் இனிமேல் இந்த வழக்கு குறித்து விசாரிக்க வேண்டாம் என உத்தரவிட்டுள்ளது.