சென்னை : கோடை விடுமுறை முடிந்து இன்று சென்னையில் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனால் மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
அதில் மாணவ மாணவியர்களின் பாதுகாப்புக் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கண்காணிப்பு கேமராக்கள் பள்ளியில் பொருத்த வேண்டும் போன்றவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களும், மாணவ மாணவியர்களின் பாதுகாப்பிற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்கள்.
மாணவர்கள் பாதுகாப்புக் கூட்டம்
கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் ஏற்பாடு செய்திருந்த இந்த கூட்டத்தில் கூடுதல் கமிஷனர்கள் சங்கர், ஜெயராம், இணை கமிஷனர்கள் பாஸ்கரன், சந்தோஷ்குமார், பவானீஸ்வரி, பிரேம் ஆனந்த சின்கா ஆகியோர் கலந்து கொண்டனர். 300க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கண்காணிப்பு கேமரா
கூட்டத்தில், பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் டிரைவர்கள், கிளீனர்கள் பற்றிய விபரங்களை சேகரித்து கொள்ள வேண்டும் என்பதுக் குறித்து விவாதிக்கப்பட்டது.
குழந்தைகளை தெரியாதவர்களோடு அனுப்பக் கூடாது
மாணவ மாணவிகளை பெற்றோர்களோ அல்லது பாதுகாலர்களோ பள்ளி வாசலில் வந்துதான் அழைத்துச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களுடன் குழந்தைகளை அனுப்பி வைக்கக்கூடாது.
கவுன்சிலிங் மூலம் அறிவுரை
மாணவ மாணவிகளை அடித்து துன்புறுத்தக் கூடாது. கவுன்சிலிங் மூலம் தான் அறிவுரை வழங்க வேண்டும். யோகா பயிற்சி வகுப்பு நடத்த வேண்டும். மாணவ மாணவிகள் வகுப்பு அறைக்குள் செல் போன் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டது.