சென்னை : ஆய்வக உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 2500 பேருக்கு பணி நியமன ஆணை 21 மாவட்டங்களில் வழங்கப்பட்டுள்ளது.
ஆய்வக உதவியாளர் பணிக்கு எழுத்துத் தேர்வு மதிப்பெண், வெயிட்டேஜ் மதிப்பெண், இட ஒதுக்கீடு அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.
ஆய்வக உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வினை பள்ளிக் கல்வி இயக்கம் சார்பில் அரசு தேர்வுத்துறை நடத்தியது. இத்தேர்வை கிட்டத்தட்ட சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதினர்.
எழுத்துத்தேர்விற்கான முடிவு கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டன. தேர்வு எழுதிய அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் பெயர் பதிவு எண் இட ஒதுக்கீடு வாரியாக இணையதளத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டன.
இதைத் தொடர்ந்து ஒரு காலியிடத்திற்கு 5 பேர் என்ற விகிதாச்சாரத்தில் சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு அழைக்கப்பட்டனர்.
சான்றிதழ் சரிப்பார்ப்பு பணி அந்தந்த மாவட்டங்களில் ஏப்ரல் 9,10,11 ஆகிய மூன்று நாட்களில் நடத்தப்பட்டது. சான்றிதழ் சரிப்பார்ப்பின் போது அசல் சான்றிதழ்கள் ஆய்வு செய்யப்பட்டு உயர் கல்வித்தகுதி பணி அனுபவம் ஆகியவற்றுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அளிக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து எழுத்துத் தேர்வு மதிப்பெண், வெயிட்டேஜ் மதிப்பெண், இட ஒதுக்கீடு அடிப்படையில் தெரிவு பட்டியல் தயாரிக்கும் பணி நடந்தது.
மதுரை, கோவை, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், நாமக்கல், பெரம்பலூர், சேலம் ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருப்பூர், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், அரியலூர் ஆகிய 21 மாவட்டங்களில் பணிக்கு தேர்வானோர் பட்டியல் சனிக்கிழமை அந்தந்த அதிகாரி அலுவலங்களில் வெளியிடப்பட்டது. வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு இன்று தெரிவு பட்டியல் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்தார்.