சென்னை : நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ படிப்பில் சேர்க்கை நடைபெற உள்ளதால் கிராமப்புற ஏழை மாணவர்களின் டாக்டர் கனவு தகர்ந்தது என்று தமிழ் வழியில் படித்து நீட் தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெற்று வந்த மருத்துவ படிப்புக்கு இந்த ஆண்டு நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வு கேள்விகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படும். எனவே சிபிஎஸ்இ பள்ளிகளில் நன்றாக படித்து 2 ஆண்டுகளாகவது நீட் தேர்வுக்காக பயிற்சியும் எடுத்தவர்கள்தான் இதில் அதிக மதிப்பெண் பெறமுடியும் என்ற கருத்து நிலவுகிறது.
மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு நீட் தேர்வு சிரமம் என்று கூறப்பட்டது. தமிழகத்தில் நீட் தேர்வை தமிழ் வழியில் படித்த பல மாணவர்களும் எழுதியுள்ளனர். அவர்களில் சிலரால் நீட் தேர்வை சரியாக எதிர்கொள்ள முடியவில்லை. இதனால் கிராமப்புற மாணவர்கள் பெரும் வேதனையில் உள்ளனர்
பயிற்சிக் கட்டணம்
நீட் தேர்வு எழுத வேண்டிய நிலை வந்ததால் தமிழகத்தில் கிராமப்புறத்தில் படித்த மாணவர்கள் பலருக்கு மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்கும் என்ற நிலை போய்விட்டது. பயிற்சி கட்டணம் ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. இதனால் நீட் தேர்வுக்கான பயிற்சி மையத்தில் கட்டணம் செலுத்தி படிக்க முடியாத நிலையே பெரும்பாலான மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
கிராமப்புற மாணவர்களின் சிரமம்
கிராமப்புறங்களில் இதற்கான பயிற்சி மையங்களும் இல்லை. ஏழைகள் நகர்ப்புறங்களில் உள்ள பயிற்சி மையங்களுக்கு சென்று படிக்க முடியவில்லை. இதன் காரணமாக அவர்களால் தேர்வினை சரியாக எழுத முடிந்திருக்காது. நீட் தேர்விற்கு தமிழ்வழிப் பயிற்சி மையங்கள் இன்னும் வரவில்லை. அதனால் மாணவர்களுக்க நீட் தேர்வு என்பது மிகவும் சிரமத்தை ஏற்படுத்துவதாகவே இருந்து வருகிறது.
கனவு கலைந்தது
நீட் தேர்வில் 11ம் வகுப்பு வாடங்களில் இருந்து பல கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. உயிரியல் பகுதியில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் எளிமையாக இருந்தன. வேதியியல் கேள்விகள் சில கடினமாக இருந்தன. இயற்பியல் கேள்விகள் சற்று கடினமான இருந்தன. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தினை பயின்ற மாணவர்களுக்கு நீட் தேர்வு எளிதாக இருந்திருக்கும். ஆனால் மாநிலப்பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு அது ஒரு சவாலாகவே இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறத்தில் படித்த ஏழை மாணவர்களின் டாக்டராகும் கனவு தகர்ந்தது.
தமிழக அரசு
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் மட்டும்தான் மதிப்பெண்கள் நிறைய பெற்று மருத்துவப் படிப்பில் சேர முடியும் என்கிற நிலைதான் இப்போது ஏற்பட்டுள்ளது. இதனால் கிராமப்புற மாணவர்களும் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவ மாணவிகளின் டாக்டர் லட்சியம் தகர்ந்தது. கனவு கலைந்தது. கிராமப்புற மாணவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் பெரும் துயரத்திற்குள்ளாகி உள்ளனர். சரியான பாடப்புத்தகமும், பயிற்சி வகுப்புக்களும் இல்லாமல் நீட் தேர்வு எழுதி விட்டு தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தில் டாக்டராகுவதற்கு வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் கிராமப்புற மாணவர்களின் துயரத்தைத் துடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?