சென்னை : அரியானா மாநிலம் பரீதாபாத் நகரில் உள்ள மகளிர் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் அண்மையில் மதிய உணவு வழங்கப்பட்ட போது அதனுள் செத்த பாம்பு ஒன்று கிடந்தது.
செத்த பாம்பு கிடந்தது தெரியாமல் அதனை சாப்பிட்ட 7 மாணவிகளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
இந்த சம்பவம் மாநிலம் முழுவதும பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து முதல் மந்திரி கட்டார் பறக்கும் படை ஒன்றை அமைத்தார்.
பறக்கும் படையினர்
பறக்கும் படையினர் அரியானா மாநில பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவை ஆய்வு செய்தனர். அதைப் பற்றிய அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
மதிய உணவு
இதையடுத்து பரீதாபாத் மாவட்டத்தில் உள்ள 6 அரசு பள்ளிகளில் மதிய உணவு தயாரிப்பதையும் மாணவர்களுக்கு பரிமாறப்படுவதையும் பறக்கும் படையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.
கெட்டுப்போன கேரட்
அப்போது சில பள்ளிகளில் மதிய உணவில் கெட்டுப்போன கேரட்டுகள் கிடந்தது கண்டறியப்பட்டது. அரசு பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவின் தரம் பற்றிய அறிக்கையையும் பறக்கும் படையினர் முதல் மந்திரிக்கு அனுப்பிவைத்து உள்ளனர்.
சுகாதாரத்துறை
மாணவர்களுக்கு மதிய உணவுக் கொடுக்கப்படுவது நல்லதிட்டம்தான். ஆனால் மதிய உணவு தரமானதாக வழங்கப்படுகிறதா என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். உணவு தரம் இல்லாததாக இருந்தால் மாணவர்களின் உயிரை கூட அது பறித்துவிடும். இதில் சுகாதாரத்துறை அதிக அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும்.