சென்னை : மத்திய கல்வி வாரியமான சிபிஎஸ்இயின் 12வது வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 9ந் தேதி தொடங்கி ஏப்ரல் 29ந் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை இந்தியா முழுவதும் 10 ஆயிரத்து 673 பள்ளிக்கூடங்களில் இருந்து 10 லட்சத்து 20 ஆயிரத்து 762 மாணவ மாணவிகள் எழுதினார்கள்.
தேர்வு முடிவு எப்போது வரும் என்று மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் சிபிஎஸ்இ 12வது வகுப்பு தேர்வு முடிவு நேற்று வெளியானது.
தேர்வு முடிவுகள் www.results.nic.in, www.cbseresults.nic.in, www.cbse.nic.in ஆகிய இணையதளங்களில் முடிவு வெளியிடப்பட்டது.
முதல் இடம் பிடித்த மாணவி
சிபிஎஸ்இ தேர்வில் டெல்லியை அடுத்த நொய்டாவைச் சேர்ந்த மாணவி ரக்க்ஷா கோபால் 500க்கு 498 மதிப்பெண்கள் எடுத்து முதல் இடம் பெற்று உள்ளார். சண்டிகாரை சேர்ந்த பூமி சாவந்த் என்ற மாணவி 497 மதிப்பெண்கள் எடுத்து 2ம் இடம் பிடித்து இருக்கிறார்.
தேர்ச்சி சதவீதம் குறைவு
சண்டிகாரை சேர்ந்த ஆதித்யா ஜெயின், மனட்லுத்ரா ஆகியோர் தலா 496 மதிப்பெண்கள் பெற்று 3வது இடத்தை பிடித்து இருக்கிறார்கள். இந்திய அளவில் 8 லட்சத்து 37 ஆயிரத்து 229 பேர் தேர்ச்சி பெற்று உள்ளளனர். இந்த தேர்ச்சி 82.02 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு தேர்ச்சி 83.05 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் தேர்ச்சி சதவீதம் குறைந்து இருக்கிறது.
சென்னை மண்டலம் 2வது இடம்
சிபிஎஸ்இ தேர்வில் 95.62 சதவீத தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் மண்டலம் முதல் இடத்தை பிடித்து உள்ளது. தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம், கோவா, அந்தமான்-நிக்கோபார் தீவுகள், டாமன்-டையூ ஆகியவற்றை உள்ளடக்கிய சென்னை மண்டலம் 92.6 சதவீத தேர்ச்சியுடன் 2வது இடத்தில் உளளது. டெல்லி மண்டல்ம் 88.37 சதவீத தேர்ச்சியுடன் 3வது இடத்தை பெற்று இருக்கிறது.
மாணவிகள் தேர்ச்சி வீதத்தில் முதலிடம்
சிபிஎஸ்இ தேர்வில் மாணவிகள் 87.5 சதவீதமும், மாணவர்கள் 78 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகள் 82.98 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 81.63 சதவீதமும், சுயநிதி பள்ளிகள் 79.27 சதவீதமும், ஜவஹர் நவோ தயா வித்யாலயா பள்ளிகள் 94.6 சதவீதமும், கேந்திர வித்யாலயா பள்ளிகள் 94.6 சதவீதமும், மத்திய திபெத் நிர்வாக பள்ளிகள் 83.57 சதவீதமும் தேர்ச்சி பெற்று உள்ளன.