சென்னை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 29ஆம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு மே 30ஆம் தேதி நடத்தப்படும் என்றார்.
நாடு முழுவதும் ஆசிரியர் பணியிடங்கள் தகுதித் தேர்வு மூலம் நிரப்பப்பட வேண்டும் என்ற நடைமுறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே, பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற முடியும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் டெட் ( TET) எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் இந்த தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு தேர்வு நடைபெற உள்ளது.
இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 29ஆம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு மே 30ஆம் தேதி நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
மே 12ஆம் தேதி பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகும். மே 19 ஆம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் கூறினார். நீட் தேர்வு தொடர்பான மத்திய அரசின் முடிவை எதிர்நோக்கியுள்ளோம் என்றும் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
சட்டசபையில் ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு முந்தைய கல்வி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஏப்ரல் 29, 30ஆம் தேதிகளில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார். அதே நாளில் தேர்வு நடைபெறும் என்று தற்போதைய கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.