சென்னை : டிஇடி தேர்விற்கு 8லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான ஹால்டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வுகள் தாள்-1 ஏப்ரல் 29 தேதியும் தாள் -2 ஏப்ரல் 30ம் தேதியும் நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் மார்ச் 6-ஆம் தேதி முதல் மார்ச் 22-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் விற்பனை செய்யப்பட்டன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை சமர்ப்பிப்பதற்கு கடைசி நாளாக மார்ச் 23ம் தேதி அறிவிக்கப்பட்டது.
இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (தாள்-1) 2 லட்சத்து, 37 ஆயிரத்து, 293 பேரும், பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வுக்கு, 5 லட்சத்து, 2 ஆயிரத்து 964 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
இதன் மூலம் ரூ.33.50 கோடி ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு வசூலாகியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பெறப்பட்ட விண்ணப்ப படிவங்கள் உடனடியாக சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டன.
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவோருக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (www.trb.tn.nic.in) இணையதளத்தில் திங்கள்கிழமை மாலை வெளியிடப்பட்டது.
விண்ணப்பதாரர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் தங்கள் விண்ணப்ப படிவ எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.