சென்னை: தமிழக அரசு சார்பில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு டான்செட் தேர்வாகும். தேர்வில் வெற்றி பெறுபவர்கள் தமிழகத்தில் உள்ள தரம் வாய்ந்த நிறுவனங்களில் முதுகலைப் படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.
எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான், எம்.பி.ஏ, எம்.சி.ஏ, போன்ற முதுகலைப்படிப்புகளை அரசு ஒதுக்கீட்டில் தமிழக கல்லூரிகள் படிப்பதற்காக அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வு டான்செட் தேர்வாகும்.
எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் படிப்புகளில் சேருவதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் 15 நகரங்களில் மற்றும் 32 துணை மையங்களில் டான்செட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.
டான்செட்
டான் செட் பொது நுழைவுத் தேர்வில் வெற்றிபெறுபவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் பல்கலைக்கழக துறைகள், பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகங்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் மற்றும் சில நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் முதுகலைப் படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.
50 சதவீத மதிப்பெண்களுடன்
பொறியியல் அல்லது தொழில்நுட்பப் பாடத்தில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்றவர்கள் இன்று நடைபெறும் டான்செட் தேர்வு எழுத தகுதி பெற்றவர்களாவர்கள்.
இறுதி ஆண்டு படிப்பவர்களும்
இடஒதுக்கீட்டுப் பிரிவினர் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது. தற்போது கல்லூரிகளில் இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் எழுதலாம்.
எம்.இ - எம்.டெக்
எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான், ஆகிய படிப்புகளுக்கான தேர்வில், இன்ஜினியரிங் மேத்மேடிக்ஸ், பேசிக் இன்ஜினியரிங் அண்ட் சயின்ஸ் மற்றும் துறைக்கு ஏற்ற பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். தவறான பதில்களுக்கு, 1/4 என்ற வீதத்தில் மதிப்பெண் பிடிக்கப்படும்.