சென்னை : கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் 2015 - 2016ம் ஆண்டு சேர்க்கப்பட்ட 25 சதவீத மாணவர்களுக்கு ரூ. 124 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. அதனை தமிழக அரசு விரைவில் பள்ளிகளுக்கு வழங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளும்க கல்வி கற்க வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி குழந்தைகள் இலவசமாக கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் அந்தப் பள்ளிகளில் சேர்க்கப்படும் குழந்தைகளில் 25 சதவீதம் நலிவடைந்த பிரிவினராக இருக்க வேண்டும். அவ்வாறு சேர்க்கப்படும் மாணவர்களுக்கு 8ம் வகுப்பு வரை இலவசக் கல்வி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான கல்வி கட்டணம் ஒரு ஆண்டுக்கு எவ்வளவு என்று கேட்டு தமிழக அரசு மத்திய அரசுக்கு அனுப்புகிறது. அதன்படி 2015- 2016ம் ஆண்டுக்கு தமிழக பள்ளிகளுக்கு கொடுக்க வேண்டிய கல்வி கட்டணம் ரூ. 124 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
அந்த நிதியை தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் எல்.கே.ஜி வகுப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி துறையும், நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கு தொடக்க பள்ளிகள் இயக்குனரகமும், மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேசன் பள்ளி இயக்குனரகம் கல்விக் கட்டணத்தை வழங்க உள்ளது.
மாவட்ட வாரியாக பள்ளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அந்த பள்ளிகளுக்கு தமிழக அரசு நிதியை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.