சென்னை : ஆசிரியர் தகுதி தேர்விற்கு கடந்த மாதம் 6ம் தேதி முதல் தமிழ் நாடு முழுவதும் விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. அதில் 33,5 கோடி ரூபாய் வசூல் ஆகி உள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வுக்கு கடந்த மாதம் 6ம் தேதி தமிழ் நாடு முழுவதும ஏராளமான பள்ளிகளில் விண்ணப்ப படிவம் வழங்கும் பணி தொடங்கியது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடந்த மாதம் 23ந் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பிளஸ்-2 படித்து விட்டு ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் மற்றும் பி.எட் படித்தவர்கள் என 7 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
ஆசிரியர் தகுதி தேர்வு
பிளஸ்-2 முடித்துவிட்டு ஆசிரியர் பயிற்சி முடித்த 2 லட்சத்து 37 ஆயிரத்து 293 பேரும், பி.எட் படித்த பட்டதாரிகள் 5 லட்சத்து 2 ஆயிரத்து 964 பேரும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர்.
மொத்தம் 7 லட்சத்து 40 ஆயிரத்து 257 பேர் ஆசிரியர் தகுதி தேர்விற்கு விண்ணப்பித்துள்ளனர்.
மனுக்கள் பரிசீலனை
ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 29ம் தேதி மற்றும் 30ம் தேதி நடைபெற உள்ளது. தற்போது மனுக்கள் பரிசீலனை நடைபெற்று வருகிறது, பரிசீலனைக்கு பிறகு அவர்கள் தேர்வு எழுத அனுமதிச் சீட்டு தயாரித்து இணையதளத்தில் வெளியிடப்படும்.
ஆசிரியர் தேர்வு மையங்கள்
ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதித் தேர்விற்கு எத்தனை தேர்வு மையங்களை அமைப்பது குறித்து தற்போது ஆலோசனை நடத்தி வருகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வு மையங்கள் விரைவில் நியமிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்
ஆசிரியர் விண்ணப்ப படிவத்துடன் தேர்வுக் கட்டணமாக ரூ. 500/-ஐ வரைவோலையாக அனுப்ப அறிவுறுத்தப்பட்டது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ரூ.250/-ஐ வரைவோலையாக அனுப்ப சலுகை வழங்கப்பட்டது.
வருமானம்
மொத்த விண்ணப்பதாரர்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் ஆவர். இவர்கள் மூலம் ரூ. 3.5 கோடி வருமானம் கிடைத்தது.
இவர்களை தவிர 6 லட்சத்து 257 பேரின் விண்ணப்பம் மூலம் ரூ. 30 கோடியே 1 லட்சத்து 28 ஆயிரத்து 500 வருமானமாக கிடைத்துள்ளது. மொத்தத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ரூ. 33,5 கோடி வருமானம் கிடைத்துள்ளது.