சென்னை : ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்காக கடந்தாண்டு நடத்தப்பட்ட சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியம் (யுபிஎஸ்சி) மே 31ந் தேதி வெளியிட்டது. இதில், 1099 மாணவ, மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், 220 பேர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ள பிரதாப் முருகன், தேசிய அளவில் 21ஆவது இடம் பிடித்து சாதித்துள்ளார். சமுதாயத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதே தன்னுடைய நோக்கம் என தெரிவித்துள்ளார்.
பிரதாப் முருகன், தனது முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது. திண்டுக்கல்லை சேர்ந்த சரவணன் இந்திய அளவில் 27வது இடமும், தமிழக அளவில் 2வது இடத்தையும் பிடித்துள்ளார்.
பிரதாப் முருகன்
தமிழகத்தில் மட்டும் 84 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் இருந்து தேர்வு எழுதிய பெங்களூரை சேர்ந்த நவின்பட் 3வது இடத்தையும், கொல்லத்தை சேர்ந்த அனு 4வது இடமும், திருப்பூரை சேர்ந்த அக்ஷய் ஸ்ரீதர் 5வது இடமும் பிடித்துள்ளனர்.
ஐஏஎஸ் அதிகாரி பணியிடங்கள்
ஒவ்வோர் ஆண்டும் சிவில் சர்வீஸஸ் பணிக்கு 1,099 (846 ஆண்கள், 253 பெண்கள்) தேர்வுசெய்யப்படுவர். இவற்றில் 500 இடங்கள் பொதுப் பிரிவினருக்கும், 347 இடங்கள் ஓ.பி.சி பிரிவினருக்கும், 163 இடங்கள் எஸ்.சி பிரிவினருக்கும், 89 இடங்கள் எஸ்.டி பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்தம் உள்ளவற்றில் 180 ஐ.ஏ.எஸ்., 150 ஐ.பி.எஸ்., 45 ஐ.எஃப்.எஸ் அதிகாரிகளுக்கான பணியிடங்களாகும்.
முதல் 25 இடங்கள்
மீதம் உள்ளவை 834 'ஏ' மற்றும் 'பி' ரகப் பணிப் பிரிவுகள். இதுதவிர 220 பேர் காத்திருப்போர் பட்டியலில் இருப்பார்கள். கடந்த 2016- ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸஸ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. முதல் 25 இடங்களில் 18 ஆண்களும், 7 பெண்களும் இடம்பிடித்துள்ளனர்.
காஷ்மீர் சாதனையாளர் பிலால் மொகைதீன்
காஷ்மீர் மாநிலத்திலிருந்து அதிகபட்சமாக 14 பேர் சிவில் சர்வீஸஸ் தேர்வில் பாஸாகியுள்ளனர். வடக்கு காஷ்மீரின் லாங்தே பகுதியில் உள்ள ஹரிபுரா யூனிசு கிராமத்தைச் சேர்ந்த பிலால் மொகைதீன் ( வயது 31) தேசிய அளவில் 10-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். தற்போது லக்னோவில் இந்திய வனத்துறை அதிகாரியாகப் பணியாற்றிவரும் பிலால் மொகைதீன், கடந்த 2012-ம் ஆண்டு ஐ.எஃப்.எஸ் பணிக்குத் தேர்வாகியிருந்தார். கடந்த ஆண்டு காஷ்மீரிலிருந்து 12 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். சிவில் சர்வீஸ் தேர்வில் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் தேர்ச்சிபெற்றிருப்பது இதுவே முதல் முறை.