'சென்னை : நீட்' தேர்விற்கு தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் எப்படி தயாராவது என்று தவித்துக் கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் பெரும்பாலான நீட் பயிற்சி வகுப்புக்கள் ஆங்கிலத்திலேயே பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது.
தமிழ் மீடியம் மற்றும் அரசு பள்ளிகளில் உள்ள மாணவ மாணவியர்கள் நீட் தேர்விற்காக விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்துள்ள மாணவ மாணவியர்கள் தமிழில் பயிற்சி வகுப்புக்கள் நடைபெற்றால் நலமாயிருக்கும் என எண்ணுகிறார்கள்.
பிளஸ் 2 வகுப்பில், அறிவியல் பிரிவில் படிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ்., படிப்பில், இதுவரை கவுன்சிலிங் மூலம் சேர்க்கப்பட்டு வந்தனர்.
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயார் செய்யப்பட்டு, மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடந்து வந்தது.
ஆனால், இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையில் மட்டுமே எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்பில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் நீட் தேர்வு மே 7ம் தேதி நடைபெற உள்ளது. நீட் தேர்வு தமிழ் தெலுங்கு உட்பட 8 மொழிகளில் நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நீட் தேர்வில் தமிழக அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விலக்கு கோரி, தமிழக சட்டசபையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப் பட்டுள்ளது. இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை.
இதனால் தமிழக மாணவர்களும் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு கட்டாயம் நீட் தேர்வு எழுத வேண்டும். பெரும்பாலான நீட் தேர்வு வகுப்புகள் ஆங்கிலத்தில் பயிற்சி வகுப்புக்களை நடத்துகின்றன.
நீட் தேர்வை இந்த வருடத்தில் இருந்து தமிழில் எழுதலாம். அதற்கு தமிழ் மீடியம் மாணவ மாணவியர்கள் மற்றும் அரசுப்பள்ளி மாணவ மாணவியர்கள் தயாராக உள்ளனர். ஆனால் தமிழ் வழி பயிற்சி வகுப்புக்கள் நீட் தேர்விற்கு இன்னும் ஆரம்பிக்கப்பட வில்லை என்பதினால் மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
நீட் தேர்வு தமிழில் எழுதலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால் தமிழ் வழியில் கல்வி கற்கும் மாணவர்களுக்காக தனி பயிற்சி வகுப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
ஆகவே ஏப்ரல் மாதம் முழுவதும் அரசு பள்ளிகளில் நீட் தேர்வுக்கு தமிழ் வழியில் பயிற்சி அளிக்க மருத்துவத்துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுப்பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.