சென்னை : இந்த மாதம் (ஜூன்) நடைபெற உள்ள தொடக்கக்கல்வி பட்டயத் (ஆசிரியர் பயிற்சி) தேர்வுகள் 28.06.2017 தொடங்கி 14.07.2017 வரை நடைபெற உள்ளது. தனித் தேர்வர்களாக முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வு எழுத இவ்வலுவலகத்தால் நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதியான 22.05.2017க்குள் விண்ணப்பிக்க தவறியவர்கள், தற்போது சிறப்பு அனுமதித்திட்டத்தின் கீழ் (தட்கல்) விண்ணப்பிக்கலாம்.
இதன் மூலம் தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பத்தையும் பக்கம் 1 முதல் 3 வரையுள்ள அறிவுரைகளை பதிவிறக்கம் செய்து கொண்டு தேர்வரின் தகுதி மற்றும் அறிவுரைகளையும் பின்பற்றி பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் நகலினை கண்டிப்பாக இணைத்து தேர்வர் வசிக்கும் மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் 09.06.2017 (நாளை) மற்றும் 10.06.2017 (நாளை மறுநாள்) ஆகிய இரு நாட்களில் தேர்வரே நேரில் சென்று பதிவு செய்யுமாறும், தேர்வுக்கட்டணத்தை செலுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
10.06.2017 மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். சிறப்பு அனுமதித்திட்டத்தின் கீழ் (தட்கல்) விண்ணப்பிக்கும் தேர்வர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்குனர் தண். வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.