சென்னை : கோடை காலத்தில் வெயில் அதிகமாக இருக்கும். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவும் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்காகவும் உங்களுக்கு சில ஆலோசனைகள் இதோ..!
1. வெயில் நேரங்களில் மாணவர்கள் அதிகம் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். தேர்விற்காக பள்ளிக்குச் செல்லும் போதும், தேர்வு முடிந்து வீட்டிற்கு வரும் போதும் வெயிலில் வருவதை தவிர்க்க வேண்டும்.
2. மதியம் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்றால் 12 மணிக்கு முன்னதாவே சென்று விடுங்கள். மதியம் பள்ளியில் இருந்து வீட்டிற்கு செல்லும் போது 4 மணிக்கு மேலே செல்லுங்கள். பள்ளிக்கு தண்ணீர் மற்றும் மதிய உணவை எல்லாம் எடுத்துச் செல்லுங்கள். 12 மணி முதல் 4 மணி வரை கூடுமானால் வெயிலில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அந்த நேரங்களில்தான் வெயில் தாக்கம் அதிகமாகக் காணப்படும்.
3. மாணவர்கள் வெளியே செல்ல வேண்டிய வேலை இருந்தால் அதனை மாலை நேரங்களில் செய்யுங்கள். வெயில் காலத்தில் எங்குச் சென்றாலும் கையில் தண்ணீர் எடுத்துச் செல்லுங்கள்.
4. எண்ணெய்யும் தண்ணியும் உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். கோடைக்காலத்தில் வாரத்திற்கு இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளியுங்கள். அது உடல் சூட்டை தணிக்கும். தண்ணீர் தாகம் எடுக்கும் போது மட்டும் குடிக்காதீர்கள். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது தண்ணீர் கட்டாயம் குடியுங்கள். நீர்ச்சத்துக் குறையும் போதுதான் உடல் சோர்வடையும். எனவே தண்ணீர் அதிகம் குடிப்பதால் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.
5. கோடை நேரங்களில் மாணவர்கள் பருத்தி ஆடைகளை அணியுங்கள். காட்டன் உடைகளை அணிவது நல்லது. அது நமது உடலில் சுரக்கும் வியர்வைகளை உள்இழுத்துக் கொள்ளும். காட்டன் உடைகள் வெயில் நேரங்களுக்கு ஏற்ற உடையாகும். வெயில் நேரங்களில் மாணவர்கள் இறுக்கமான உடைகளை அணியக் கூடாது.
6. வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் உணவுக் கட்டுப்பாடும் அவசியமானதாகும். நொறுக்குத் தீனிகளை உண்பதற்குப் பதில் வெள்ளரிப் பிஞ்சுகளை உண்ணுங்கள் அது உடலுக்கு நல்லது.
7. வெயிலினால் உடலில் இருந்து அதிகப்படியான வியர்வைகள் வியர்வை சுரப்பியின் மூலம் வெளியேற்றப்படுகிறது. எனவே இயற்கை தந்த வரப்பிரசாதமான இளநீர், வெள்ளரிப் பிஞ்சு தர்யூசணி ஆகியவற்றை உணவில் அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். இதில் 93% நீர்ச்சத்துக் காணப்படுவதால் இது வியர்வை மூலம் வெளியேறும் அதிகப்படியான நீர்ச்சத்தினை ஈடுகட்டுவதாக அமையும்.
8. மேலும் வெயில் நேரங்களில் நாம் வெளியே செல்லும் போது நமது உடலின் நிறமும் மாறத் தொடங்கும். அப்படி மாறும் நிறத்தினை மீட்டு எடுக்க வெள்ளரிப் பிஞ்சினை முகத்தில் பூசிக் கொள்ளலாம். அது குளிர்ச்சியாகவும் இருக்கும்.
9. வெயில் நேரங்களில் வேகவைத்த உணவுகளை விட பச்சைக் காய்கறிகளை உண்ணுவது நல்லது. கேரட், தக்காளி போன்ற காய்கறிகளை பச்சையாக உண்ணலாம். உருளைக் கிழங்கு, வெங்காயம், கடலை வகை, கீரைவகைகள், மிளகு, இஞ்சி, மீன், பால் மற்றும் சுரைக்காய் போன்றவற்றை உணவில் அதிகம் எடுத்துக்கொள்வது நல்லது.
10. கோடைக்காலத்தில் உலர்ந்த பழங்களை உண்ணுவதைத் தவிர்த்து, பிரஸ்ஸான பழங்களை உண்ண வேண்டும். பழங்களை சாறு தயாரித்துக் குடிப்பதைவிட அப்படியே உண்ணுவது நல்லதாகும்.