சென்னை : கோடை வெயில் மண்டையைப் பிளக்கிறது. அதனால்தான் பள்ளிகளுக்கும் லீவு முன்கூட்டியே விடுறாங்க. வெயில் இருந்து தப்பிக்க நீங்க என்ன செய்யனும்னா சிலவற்றை கடைப்பிடிக்கனும் சிலவற்றை கைவிடனும் அவ்வளவுதான்.
வெயில் கொளுத்தி வருவதால் பலர் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கிறார்கள். மேலும் சாலைகளில் அனல் காற்று வீசுவதால் வாக ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
இப்போவே இவ்வளவு வெயில் அடிக்குதே இன்னும் கத்திரி வந்தா எப்படி இருக்கும்ன்னு மக்கள் பயப்படுகின்றனர். வெயிலின் கொடுமை மக்களை வாட்டி வதக்குகிறது.
தண்ணீர் அதிகமாக குடிங்க
வெப்ப அலை மற்றும் வெப்ப காற்று தொடர்பான வானிலை முன்னறிவிப்புகளை ரேடியோ, டிவி செய்தித்தாள் வழியாகத் தினமும் தெரிந்து கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும். தினமும் இருமுறைக் கட்டாயம் குளிக்க வேண்டும். லேசான வெளிர் நிற பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.
எம்.ஜிஆர். மாதிரி போங்க
வெளியில் செல்கிறீர்கள் என்றால் கட்டாயம் எம்ஜிஆர் மாதிரி குளிர் கண்ணாடி, தொப்பி, குடை, தண்ணீர், காலணி ஆகியவற்றுடன்தான் வெளியில் செல்ல வேண்டும். வெயில் படும் இடத்தில் வேலை செய்பவர்கள் தொப்பி அல்லது குடையைக் கொண்டு தங்களுடைய தலைப்பகுதியை காத்துக் கொள்ள வேண்டும். நீர்ச்சத்து குறையாமல் இருப்பதற்கு லஸ்சி, சாதம் கஞ்சி, எலுமிச்சை பழச்சாறு, மோர், இளநீர், நொங்கு, போன்ற வெயிலில் இருந்து பாதுகாக்கும் உணவுப் பொருட்களை உண்ண வேண்டும்.
மயக்கம் வந்தால்
சோர்வு, தளர்வு, மயக்கம், தலைவலி போன்றவை வந்தால் உடனே அருகில் உள்ள டாக்டரை அணுகுங்கள். மேலும் முதலுதவியாக வீட்டிலேயே சிறிது குளிர்ந்த நீர் அதில் உப்பு மற்றும் சர்க்கரை ஆகியவற்றைக் கலந்து குடித்து விட்டு செல்லுங்கள். அது உங்கள் சோர்வு, தளர்வு, மயக்கம், தலைவலியைக் குறைக்கும்.
செல்லப் பிராணிகளுக்கு
வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளை நிழல் உள்ள இடங்களில் வைத்து பராமரிக்க வேண்டும். மேலும் அதற்கு தேவையான அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும். வீட்டில் பகல் நேரங்களில் ஸ்கிரீன் உபயோகித்து வெயில் உள்ளே வராதவாறு பாதுகாத்துக் கொள்ளுங்கள். இரவு நேரங்களில் சன்னல் கதவுகளை திறந்து வைத்துக் கொண்டு உறங்குவது நல்லது.
வெயிலில் வேலை பார்க்கக் கூடாது
கடின வேலைகளை வெயில் நேரத்தில் பார்க்கக் கூடாது. கூடுமான வரையில் நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்லாமல் இருப்பது நல்லது. முக்கியமாக குழந்தைகள், பெரியவர்கள் இந்த நேரத்தில் வெளியில் செல்லக் கூடாது. நிறுத்தப்பட்ட வாகங்களில் குழந்தைகளையோ அல்லது செல்லப்பிராணிகளையோ விட்டுவிட்டுச் செல்லக்கூடாது. அது ஆபத்தை விளைவிக்கும்.
கறுப்பு நிற டிரஸ் கூடாது
கறுப்புநிறம் மற்றும் டார்க் நிற ஆடைகள், குடைகளை உபயோகிக்க கூடாது. இறுக்கமான உடைகளை அணியக்கூடாது. குளிக்காமல் இருக்கக் கூடாது. வெப்பம் அதிகமாக இருக்கும் போது சமைப்பதை தவிர்க்கலாம். சமையல் அறையில் உள்ள ஜன்னல்களை திறந்தவைத்துக் கொள்ள வேண்டும். புகையை வெளியேற்றும் எக்சாஸ் ஃபேன்களை மறக்காமல் உபயோகிக் வேண்டும்.
டீ குடிக்காதீங்க ப்ளீஸ்
உடலின் நீர்ச்சத்தைப் பாதிக்கும் டீ, காபி, மது மற்றும் குளிர்பானங்களை தவிர்க்கலாம். செயற்கை குளிர்பானங்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அதிகப் புரதச் சத்து உணவுகள் மற்றும் பதப்படுத்தப்படாத உணவுகளை தவிர்க்கலாம். சமைத்த உணவுகளை அதிகமாக குளிர்சாதப் பெட்டிகளில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.