சென்னை : தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டய படிப்புக்கான அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 11 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த படிப்புக்கு 2017-2018ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் 31ந் தேதி முதல் www.tnscert.org என்ற இணையதளத்தின் மூலம் பெறப்பட்டு வருகிறது.
இந்த படிப்பில் சேருவதற்கு பிளஸ்2 தேர்வில் 1200க்கு 540 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. ஆதிதிராவிடர், அருந்ததியர் மற்றும் பழங்குடியினர் பிளஸ்2 தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானதாகும்.
விண்ணப்பதாரர்கள் 31.07.2017 அன்று 30 வயதுக்கு மிகாமலும், ஆதிதிராவிடர், அருந்தியர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 35 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்ட பிரிவு மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர்கள் ரூ. 500ம் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர்கள் ரூ- 250ம் செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணத்தை டெபிட்-கிரெடிட் கார்டுகள், இணையதள வங்கி சேவை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி செலுத்தலாம். கட்டணத்தை செலுத்திய பிறகு தான் விண்ணப்பம் முழுமையாக பதிவேற்றம் செய்யப்படும்.
கலந்தாய்வு நடத்தப்படும்
விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்வதற்கு 21ந் தேதி கடைசி நாள். மாணவர்கள் இணையதளத்தில் தங்களது விபரங்களை ஒவ்வொன்றாக உள்ளீடு செய்து அனைத்து விபரங்களையும் பதிவேற்ற வேண்டும். கலந்தாய்வுக்கு முன்னர் தகுதியான விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும். அதன் பின்னர் தர எண் நிர்ணயிக்கப்பட்டு கலந்தாய்வு நடத்தப்படும்.
ஆசிரியர் பயிற்சி படிப்பில் ஆர்வம் இல்லை
தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டய படிப்புக்கு விண்ணப்ப வினியோகம் தொடங்கி ஒரு வாரம் ஆகியும் 680 பேர் மட்டுமே விண்ணப்பம் செய்துள்ளனர். ஆசிரியர் படிப்புக்கு ஒரு காலத்தில் போட்டிப்போட்ட நிலைமை மாறி தற்போது ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு ஆர்வம் காட்டாமல், மாணவர்கள் வெறுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வேலை வாய்ப்பு குறைவு
சமீபத்தில் நடந்த தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டய படிப்பு முடித்தவர்களுக்கான இடைநிலை ஆசிரியர் பணியிடத்துக்கான தேர்வை மட்டும் 2 லட்சத்து 37 ஆயிரத்து 293 பேர் எழுதுவதற்கு விண்ணப்பித்திருந்தனர். இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் இல்லாததாலும், வேலை வாய்ப்பு குறைவாக உள்ளதாலும் தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டய படிப்பில் சேருவதற்கு மாணவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என கல்வித்துறையை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.