சென்னை : கொளுத்தும் வெயில் இயற்கையானதுதான் . இயற்கையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது நியதி. ஆனால், இயற்கையின் சீற்றத்திலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள நாம் தான் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரையும் வெயில் வாட்டி வதைக்கிறது. வெயில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும்.
1. குழந்தைகள் பெரும்பாலும் மார்டன் டிரேஸ்களை லீவு நாட்களில் உடுத்த ஆசைப்படுவதுண்டு. ஆனால் வெயில் காலங்களில் நல்ல பருத்தி ஆடைகளை மட்டுமே குழந்தைகளுக்கு அணிவிக்க வேண்டும்.
2. குழந்தைகள் தங்கள் இஷ்டம் போல் அம்மா ஆடை அணிய விட மாட்டங்கிறாங்களே என நினைப்பதுண்டு. அவர்களுக்க வெயில் நேரத்தில் ஏற்ற ஆடை பருத்தித்தான் அதை அணிந்தால்தான் நல்லது. வெயில் நேரங்களில் நம் உடம்பில் இருந்து அதிகப்படியான வியர்வை சுரக்கும் என்பதால் பருத்தி ஆடைதான் உடம்புக்கு சிறந்தது என குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும்.
3. குழந்தைகளுக்கு கோடை விடுமுறை என்பதால் அவர்கள் நண்பர்களோடு நல்ல ஆட்டம் போடும் நேரமும் இதுதான். வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் மதியம் 12 மணி முதல் 4 மணி வரை குழந்தைகளை வெயிலில் விளையாட அனுமதிக்கக் கூடாது. நிழலில் விளையாட அனுமதிக்கலாம்.
4. ஏசியில் தூங்கும் பழக்கத்தை குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே ஏற்படுத்துவது நல்லது கிடையாது. அதற்குப் பதிலாக கோடை நேரத்தில் நல்ல ஃபேன் வாங்கி மாட்டுங்கள். அந்தக் காற்றும் பத்தவில்லை என்றால் ஜன்னல் கதவுகளை திறந்து வைத்து தூங்குவதற்கு கற்றுக் கொடுங்கள்.
5. உணவுப் பண்டங்களை உண்ணும் போது குழந்தைகள் கவனமாக இருக்க வேண்டும். எண்ணெய் பண்டங்களை அதிகமாக வெயில் நேரங்களில் உண்ணக் கூடாது.
6. வெளியில் விளையாடி விட்டு அப்படியே வந்து உணவு அருந்துதல் கூடாது. கைகளை நன்றாகக் கழுவி விட்டுதான் சாப்பிட வேண்டும். இல்லையெனில் காலரா, டைபாய்டு போன்ற நோய்கள் வந்து விடும்.
7. வெயில் நேரங்களில் குழந்தைகளுக்கு குளிப்பாட்டி விட்டு உடனே பவுடர் பூசுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் வெயில் நேரங்களில் வியர்வைச் சுரப்பிகள் மூலம் வியர்வை வெளியேறுவதை பவுடர்கள் தடுத்துவிடும்.
8. வெயிலில் குழந்தைகளை விளையாட விடுவதினால் உடல் சூடாகி விடும். பின் வெயிலினால் மஞ்சள்காமாலை, வயிறு வலி, வயிற்றுப் போக்கு என பல நோய்கள் வந்து விடும்.
9. குழந்தைகளுக்கு வெயில் நேரங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என பெற்றோர்கள் சொல்ல வேண்டும். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஒரு நாளைக்கு இரண்டு முறை குழந்தைகளை குளிக்க வைப்பது நல்லது.
10. குழந்தைகளுக்கு வெயில் நேரங்களில் நல்ல உணவு முறைகளை பழக்கப்படுத்த வேண்டும். பழச்சாறு, இளநீர், மோர் போன்றவற்றை குழந்தைகளுக்குப் பழக்கப்படுத்த வேண்டும்.