சென்னை : பள்ளி வாகனங்களில் விரைவில் ஆய்வு நடத்தப்பட உள்ளதாகவும் ஆய்வில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ள வாகனங்களுக்கு தகுதிச்சான்று அளிக்கப் போவதில்லை என்றும் போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளி, கல்லூரி வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான ஆய்வுகள் அடுத்த ஒரு வாரத்தில் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு அம்சங்களில் குறைபாடு உள்ள வாகனங்களுக்கு தகுதிச் சான்று கிடைக்காது என போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சுமார் 38 ஆயிரம் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த வாகனங்கள் விபத்தில் சிக்காமல் இருக்க முன்கூட்டியே பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆண்டுதோறும் ஆய்வு நடத் தப்பட்டு வருகிறது.
வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு (ஆர்டிஓ) உட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் டயர்கள், அவசர கால கதவு, ஜன்னல்கள், படிகள், தீயணைப்பு கருவிகள், முதல் உதவிப் பெட்டி, ஹேண்ட் பிரேக், ஓட்டுநர்களின் கண் பார்வை, வேகக் கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட 16 அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்தப்படும்.
இதற்கிடையே, இந்த ஆண்டில் பள்ளி வாகனங்களில் ஆய்வு ஒரு வாரத்தில் தொடங்கப்படஉள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறுகையில், 'பள்ளி வாகனங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆண்டுதோறும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டிற்கான ஆய்வு பணிகள் ஒரு வாரத்தில் தொடங்குகிறது. வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக 16 அம்சங்கள் குறித்து முழுமையாக ஆய்வு நடத்தப்படும். குறைபாடுகள் இருந்தால், ஒரு வாரத்தில் சரிசெய்யுமாறு உத்தரவிடப்படும். வாகனங்களில் குறைபாடுகள் இருந்தால் தகுதிச் சான்று வழங்கப்பட மாட்டாது. பெரிய அளவில் குறைபாடுகள் இருந்தால், பர்மிட் சஸ்பெண்ட் செய்யப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.