சென்னை : நேற்று மருத்துவ பட்ட மேற்படிப்பில் சேருவதற்காக தரவரிசை வெளியிடப்பட்டதை அடுத்து இன்று (திங்கட் கிழமை) மாற்று திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. பொது கலந்தாய்வு நாளை தொடங்குகிறது.
தமிழக கிராமப்புற ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு மருத்துவ பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வந்தது. இந்த நிலையில் நீட் தேர்வு எனும் அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வு சாத்தியப்படுத்தப்பட்ட நிலையில் இந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.
இதனை எதிர்த்து அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தநிலையில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்கக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கின் மீதாத தீர்ப்பில் இட ஒதுக்கீட விவகாரத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் விதிகள் மட்டுமே செல்லும் என்றும் விதிகளின் படி கடினம் என்று கருதும் பகுதிகளை தமிழக அரசு வகைப்படுத்தி கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
தரவரிசைப் பட்டியல்
சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி அதாவது இந்திய மருத்துவ கவுன்சில் வழிகாட்டுதல்படி மருத்துவ பட்டமேற்படிப்புக்கான தரவரிசை பட்டியலை மருத்துவ கல்வி இயக்குனரகம் வெளியிட்டு உள்ளது. இந்த தரவரிசை பட்டியலை www.tn.health.gov.in எனும் இணையதளத்தில் காணலாம். நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், ஊக்க மதிப்பெண்கள், பணியாற்றிய ஆண்டு ஆகியவற்றின் அடிப்படையில், இப்பட்டிய்ல வெளியிடப்பட்டு இருக்கிறது. இதுதவிர அரசு மருத்துவ கல்லூரிகள் சுயநிதி மருத்து கல்லூரிகள், ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி (அண்ணாமலை பல்கலைக்கழகம்) ஆகியவற்றிலும் அரசு இடங்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதேபோல அரசு பல் மருத்துவ கல்லூரிகள், சுயநிதி பல்மருத்துவ கல்லூரிகள் ஆகியவற்றிலும் உள்ள அரசு இடங்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது.
தரவரிசை பட்டியலில் முதலிடம்
அதன்படி மருத்துவ பட்ட மேற்படிப்பில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் டாக்டர் புவனேஸ்வரி 1,486.42 மதிப்பெண்கள் பெற்று தரவரிசை பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார். டாக்டர்கள் ஐஸ்வர்யாசுயம்புலிங்கம், பிரதாப், ஸ்ரீனிவாசன், பொன்சங்கர் ஆனந்த ராஜா, கார்த்திக் ராஜன், சுப்பிரமணியன், வெங்கடேஸ்வரன் ஜெயராஜா ஆகியோர் முறை அடுத்தடுத்த இடங்களை பிடித்து உள்ளனர். அதேபோல் பல் மருத்துவ பட்ட மேற்படிப்பில் டாக்டர் கலாதேவி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து இருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக டாக்டர் பார்கவி என்பவர் 2வது இடத்தை பிடித்து உள்ளார்.
மருத்துவ கவுன்சில்
இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படி கடினமான பகுதிகளில் பணியாற்றிய டாக்டர்களுக்கு அவர்கள் நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் ஆண்டுக்கு 10 சதவீதம் என்ற வகையில் அதிகபட்சம் 30 சதவீதம் ஊக்க மதிப்பெண்கள் வழங்க வேண்டும எனபது குறிப்பிடத்தக்கது. அதன்படி தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலந்தாய்வு
மருத்துவ பட்டமேற்படிப்பில் சேருவதற்கான மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு இன்று (திங்கட் கிழமை) பகல் 12 மணிக்கு சென்னை பல் நோக்கு சிறப்புமருத்துவ மனையில் நடக்கிறது. பொது கலந்தாய்வு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்குகிறது. கலந்தாய்வு 11ந் தேதி வரை நடக்கிறது. 563 இடங்களுக்கு 1,000 பேர் அழைக்கப்படுகிறார்கள்.