சென்னை : நீட் தேர்வு முடிவு பல சர்ச்சைக்குப் பின் நேற்று ஜூன் 23ந் தேதி வெளியிடப்பட்டது. அதில் பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த நவ்தீப் சிங் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.
நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம் உட்பட 10 மொழிகளில் மே 7ந் தேதி நடந்தது. அதற்கான ரிசல்ட் நேற்று ஜூன் 23ந் தேதி www.cbseneet.nic.in, www.cbse.nic.in, www.cbseresults.nic.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டது.
நீட் தேர்வில் பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த மாணவர் நவதீப் சிங் 720 மதிப்பெண்ணிற்கு 697 மதிப்பெண் எடுத்து முதலிடம் பெற்று சாதனைப் படைத்துள்ளார். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்சித் குப்தா, மணிஷ் மூல்சந்தானி ஆகியோர் தலா 695 மதிப்பெண்கள் பெற்று 2வது ,3வது இடங்களை பெற்று சாதித்துள்ளனர்.
முதல் 7 இடங்களை மாணவர்களே பெற்றுள்ளனர். முதல் 25 இடங்களில் 16 மாணவர்களும், 9 மாணவிகளும் உள்ளனர். நீட் தேர்வில் முதல் 25 இடங்களில் தமிழகத்தைச் சார்ந்த மாணவ மாணவியர்கள் இடம் பெறவில்லை.
நீட் தேர்வை ஆங்கிலத்தில்தான் அதிகமான மாணவர்கள் எழுதியுள்ளனர். ஆங்கிலத்தில் 9 லட்சத்து 13 ஆயிரத்து 33 பேரும், 2வதாக இந்தியில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 663 பேரும் எழுதினார்கள்.