சென்னை : தேர்வில் மதிப்பெண் குறைவு, தோல்வி போன்ற காரணங்களால் 5 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தூக்குப் போட்டும், தீக்குளித்தும் மாணவிகள் கொடூரமாக தற்கொலை செய்துள்ளது மிகவும் வருத்தத்திற்குரியதாகும்.
சென்னை வளசரவாக்கத்தைச் சார்ந்த கிரேசில்லா என்ற மாணவி தான் எதிர்ப்பார்த்த மார்க் வராததால் தீக்குளித்து இறந்தார். அலறி துடித்த அவரைப் பெற்றோர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சைப் பலன் இல்லாமல் உயிர் இழந்தார். போலீசார் இதுக் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திண்டுக்கல் போடிக்காமன்வாடியை சேர்ந்த பிரபாதேவி தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். அவரது தகப்பனார் கவலை வேண்டாம் மறுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுக் கொள்ளலாம் என்றுக் கூறியும் தகப்பனார் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்புவதற்கு முன்பு அரளிக்காயை அரைத்து குடித்துவிட்டார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பதிதாபமாக இறந்தார்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டம் வெள்ள கோவிலை சேர்ந்த நிவேதா வேதியியல் இயற்பியல் தேர்வுகளில் தோல்வியடைந்து விடுவோம் என்கிற பயத்தினால் நேற்று காலையில் தற்கொலை செய்து கொண்டார். நினைத்தது போலவே இரு பாடங்களிலும் தேர்ச்சி பெறவில்லை.
கடலூர்
கடலூர் மாவட்டம் மா.கொத்தங்குடி கிராமத்தைச் சார்ந்த கிருஷ்ண பிரியா தமிழ் பாடத்தில் தோல்வி அடைந்ததால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்தார். மருத்துவமனைக்கு கொண்டு போகும் வழியிலேயே இறந்தார்.
விழுப்புரம்
விழுப்புரம் ஆனாங்கூர் கிராமத்தை சேர்ந்த ஒரு மாணவியும் விழுப்புரம் வளவனூரைச் சார்ந்த ஒரு மாணவியும் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் விஷம் குடித்து இறந்தனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு மாணவி 2 பாடங்களில் தோல்வி அடைந்துவிட்டதால் பூச்சி மருந்தை குடித்துவிட்டார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கன்னிவாடி பகுதியை சேர்ந்த ஒரு மாணவியும் குறைவான மதிப்பெண் பெற்றதால் விஷம் குடித்து விட்டார். இவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
பெற்றோர்களின் கவனத்திற்கு
தோல்வி பயத்தால் மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். உளவியல் ஆலோசனைகளுக்காக 104 என்கிற எண்ணில் சிறப்பு ஆலோசனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டும் 5 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது வருத்தத்திற்குரியதாகும். மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மனநிலையைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். பலவீமான மனநிலைக் கொண்டவர்களை பெற்றோர்கள் தனியாக விட்டுச் செல்லக் கூடாது.