சென்னை : 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவர இருக்கும் இந்த நேரத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்கைளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும். அவர்களின் வெற்றித் தோல்விகளில் அவர்களுடன் இருந்து அவர்களுக்கு முழு பக்கபலமாக இருக்க வேண்டியக் கடமை பெற்றோர்களுக்குத்தான் அதிகமாக உள்ளது.
12ம் வகுப்பு பொதுத் தேர்வு மே 12ம் தேதி வெளியாகும். 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மே 19ம் தேதி வெளியாகிறது என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிந்த சில நாட்களிலேயே பல மாணவர்கள் தேர்வு முடிவைக் குறித்த பயத்தில் வீட்டை விட்டு வெளியேறுதல், தவறான முடிவுகளை எடுத்தல் போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றனர்.
பெற்றோர்கள் கவனத்திற்கு
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மனநிலையை நன்றாகப் புரிந்தவர்கள். அதனால் பெற்றோர்கள் குழந்தைகளிடம் அவர்கள் எடுக்கும் மதிப்பெண்களைக் குறித்து அதிகமாக விமர்சித்துவிடக் கூடாது. மதிப்பெண் அதிகமாகப் பெற்றால் பாராட்டுங்கள். சற்று குறைந்துவிட்டால் அதற்காக அவர்களைக் காயப்படுத்தாதீர்கள். அவர்களுக்கு ஆறுதலாக இருங்கள்.
பக்கபலமாக இருங்கள்
உன்னால் சாதிக்கமுடியும். வெறும் மதிப்பெண்களும் உயர்க்கல்வியும் மட்டும் வாழ்க்கையல்ல என்பதை உங்கள் குழந்தைகளுக்கு உணர்த்துங்கள். அவர்கள் விருப்பத்தைக் கேட்டு அதற்கேற்ற உயர்கல்வி படிப்புகளில் அவர்களை சேர்த்துவிடுங்கள். இன்னும் இரண்டு நாட்கள்தான் தேர்வு முடிவு வர விருப்பதால் தங்கள் எதிர்காலமே இந்த தேர்வு முடிவுதான் எப்படி வருமோ என பயந்து கொண்டிருக்கும் உங்கள் பிள்ளைகளுக்கு தைரியம் கொடுங்கள். அவர்களைத் தனியாக விடாதீர்கள். அவர்கள் மேல் எப்போதும் ஒரு கண் வைத்துக் கொண்டே இருங்கள்.
ஆசிரியர் பணி
என்னுடைய சொந்த அனுபவத்தில் ஒன்றைக் கூற விரும்புகிறேன். நான் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று டிகிரி முடித்தேன். என் தோழி 12ம் வகுப்புத் தேர்வில் கணிதத்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. அப்பொழுதெல்லாம் தேர்ச்சி பெறாவிட்டால் ஒரு வருடம் வீணாகும். ஆனால் இப்போது அப்படிக் கிடையாது. உடனே மறுதேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுவிடலாம். இப்போது நான் வெறும் ஒரு டிகிரி முடித்த நிலையிலேயே உள்ளேன். ஆனால் என் தோழி மறு வருடம் கணிதத்தில் தேர்ச்சிப் பெற்று பிஎஸ்சி, எம்எஸ்சி, எம்பில் வரைப் படித்து இன்று ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
ஒவ்வொருவரும் வெற்றியாளர்களே
மாணவர்களே வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணம் உங்களுக்கு வரவேண்டும். வெற்றியையும் தோல்வியையும் ஒன்றாக பாவிக்கும் மனப்பக்குவத்தை தங்கள் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் கற்றுத் தரவேண்டும். மாணவப் பருவம் மகிழ்ச்சியான பருவம். மதிப்பெண் மட்டும் உங்கள் மகிழ்ச்சியை நிர்ணயிக்கப் போவதில்லை. உங்கள் உள்ள உறுதித்தான் உங்களை உங்கள் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும். அதனால் ஒவ்வொரு மாணவர்களும் உங்கள் தேர்வு முடிவினை தைரியமாக எதிர்கொள்ளுங்கள். தன்னம்பிக்கையுடன் உங்கள் வாழ்வைத் தொடருங்கள். வெற்றி என்பது வெறும் மதிப்பெண்கள் மட்டும் அல்ல உங்கள் தன்னம்பிக்கையும் தைரியமும்தான் உங்களின் உண்மையான வெற்றி. தைரியம் உள்ள ஒவ்வொருவரும் உண்மையான வெற்றியாளர்கள் ஆவர்.