சென்னை :10ம் வகுப்பு சான்றிதழில் 14 இலக்க நிரந்தர குறியீட்டு எண்ணைச் சேர்து வழங்க அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. தமிழில் பெயர் சேர்ப்பதற்கான பணிகளையும் தேர்வுத்துறை தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் உள்ள 10ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கான பள்ளிச் சான்றிதழில் நிரந்தர குறியீட்டு எண்ணை தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
அத்துடன் தமிழில் மாணவ மாணவியர்களுடைய பெயரை சேர்ப்பதற்கான பணிகளும் துவங்கப்பட்டு விட்டன என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
போலிச் சான்றிதழ்கள்
தமிழகத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கான சான்றிதழ்களில், போலி சான்றிதழ்களை தடுக்க, தமிழக அரசின் தேர்வுத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நிரந்தர குறியீட்டு எண்
இதன் ஒரு கட்டமாக, 2016ம் ஆண்டு முதல் 14 இலக்க நிரந்தர குறியீட்டு எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்பட்ட, ஹால் டிக்கெட்டில், இந்த எண் இடம் பெற்றது; சான்றிதழிலும் பதிவு செய்யப்பட்டது.
ஆதாரா? எமிஸா?
இந்த ஆண்டு, ஆதார் எண் மற்றும் கல்வித்துறையின் மின்னணு மேலாண் தகவல் பிரிவின் சார்பில், எமிஸ் எண் வழங்கப்பட்டது. எனவே, எந்த எண்ணை, சான்றிதழில் பதிவு செய்வது என, தேர்வுத்துறை குழப்பத்தில் இருந்தது. இந்நிலையில், எமிஸ் எண் மற்றும் ஆதார் எண்களை மறுஆய்வு செய்ய வேண்டிய நிலை உள்ளது.
தமிழில் மாணவர்கள் பெயர்
எனவே மீண்டும், நிரந்தர குறியீட்டு எண்ணைப் பயன்படுத்த, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. அதேபோல், இந்த ஆண்டு முதல், மாணவரின் பெயர் மற்றும் இன்ஷியல், தமிழிலும் இடம்பெற உள்ளது.
பள்ளியின் விபரம்
பள்ளியின் பெயர் விபரமும், சான்றிதழில் இருக்கும். இதற்காக, தேர்வு முடிந்ததும், மாணவர்களிடம் அவர்களின் பெயரை, இன்ஷியலுடன் தமிழில் எழுதி கையெழுத்து வாங்கப்பட்டது. இந்த விபரங்கள், ஆன்லைனில் பதிவு செய்யும் பணி, நேற்று துவங்கியது.