சென்னை : 12ம் வகுப்பு விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தினமும் 24 விடைத்தாள்களை திருத்த வேண்டும். 24 விடைத்தாள் என்பது 20 விடைத்தாளாக குறைக்கப்பட்டுள்ளது.
12ம் வகுப்பு விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்கள் காலையில் 12 விடைத்தாள்கள் மதியதிற்கு மேல் 12 விடைத்தாள்கள் என நாளொன்றுக்கு 24 விடைத்தாள்களை திருத்துவது வழக்கமாக உள்ளது.
12ம் வகுப்பு விடைத்தாள்கள் 200 மதிப்பெண்களைக் கொண்டது. 200 மதிப்பெண்களை கொண்ட 24 விடைத்தாள்களை தினமும் திருத்துவது ஆசிரியர்களுக்கு சிரமமாகவே இருந்து வந்தது.
பணிச்சுமை
12ம் வகுப்பு விடைத்தாள்கள் தினமும் 24 விடைத்தாள்களை அவசரமாக திருத்துவதினாலும், பணிச்சுமை அதிகமாகக் காணப்படுவதாலும், உரிய முறையில் விடை மதிப்பீடு செய்ய முடிவதில்லை எனவும் ஆசிரியர்கள் வேதனை தெரிவித்தனர்.
ஆசிரியர்களின் கோரிக்கை
மறுமதிப்பீட்டுக்கு விடைத்தாள்களை சமர்ப்பிக்கும் போது விடைத்தாள் திருத்துபவரின் தவறுகள் வெளிக்கொண்டு வரப்படுகிறது. இதனால் தினமும் திருத்தப்படும் 24 விடைத்தாளுக்குப் பதிலாக 20 விடைத்தாள்களை திருத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் தேர்வு மற்றும் கல்வித்துறையிடம் சில வருடங்களாக தொடர்ந்து வலியுறுத்தி வரப்பட்டது.
விடைத்தாள் திருத்துவதில் விலக்கு
நடப்பாண்டும் அந்த கோரிக்கைகள் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. அவர்களின் கோரிக்கையை ஏற்று காலை 10 விடைத்தாள், மதியம் 10 விடைத்தாள் என நாள்தோறும் 20 விடைத்தாள் திருத்தினால் போதும் எனவும், 4 விடைத்தாள்களுக்கு விலக்கு அளிப்பதாகவும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
விடைத்தாள் மையம்
மேலும் முதல் முறையாக அந்தந்த கல்வி மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்களே அதே கல்வி மாவட்டத்தில் நடக்கும் விடைத்தாள் திருத்தும் மையத்தில் பணியாற்றவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் ரிலாக்ஸ்
ஏப்ரல் 5ம் தேதி பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும்பணி ஆரம்பமானது அதில் நாள்தோறும் 20 விடைத்தாள்களை ஆசிரியர்கள் திருத்துகின்றனர். உயிரியல் விடைத்தாள்களை காலையில் 8 மதிய வேளைக்குப் பிறகு 8 எனவும் திருத்துகின்றனர். கல்வித்துறையின் இந்த அறிவிப்பால் ஆசிரியர்கள் ரிலாக்சாக பணியாற்றுகிறார்கள்.