சென்னை : மே மாதம் 7ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க மார்ச் 1ம் தேதியோடு கால அவகாசம் முடிந்த நிலையில் உச்ச நீதி மன்றம் ஏப்ரல் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.
நீட் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கு மீண்டும் 5 நாட்கள் கால அவகாசத்தை உச்ச நீதி மன்றம் அறிவித்தது. உச்சநீதிமன்றத்தால் ஏற்படுத்தப்பட்ட வாய்ப்பு அதாவது நீட் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்ற மறு வாய்ப்பு ஏப்ரல் 5 இன்றோடு முடிவடைகிறது.
நீட் தேர்வினை சி.பி.எஸ்.இ நடத்துகிறது. சி.பி.எஸ்.இ நீட் தேர்வினை 25 வயதிற்குட்பட்டவர்கள் மட்டுமே எழுத வேண்டும் என கூறியிருந்தது. அது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றம் 25 வயதிற்கு மேற்பட்டவர்களும் நீட் தேர்வினை எழுதலாம் என தீர்ப்பளித்துள்ளது. சி.பி.எஸ்.இ உச்ச நீதி மன்ற தீர்ப்பை ஏற்றுக் கொண்டு அதற்கு இசைவு தெரிவித்துள்ளது.
நீட் தேர்விற்கு இன்று இரவு 11.59 மணி வரைக்கும் விண்ணப்பிக்கலாம். அதற்குப் பின்வு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது.
நீட் தேர்விற்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இன்று இரவு 11.59 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வாய்ப்பினை அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் அனைவரும் பயன்படுத்தி இன்று இரவிற்குள் நீட் தேர்விற்கு விண்ணப்பித்து விட்டால் வரும் கல்வியாண்டில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் போன்ற படிப்புகளில் சேர்ந்து படிப்பதற்கு சிக்கல்கள் ஏதும் வராது என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நீட் நுழைவுத் தேர்வு மூலம் அரசு கல்லூரிகளிலுள்ள தேசிய இடஒதுக்கீட்டிற்கான 15% இடம் நிரப்பப்படுகிறது. மற்றும் தனியார் கல்லூரிகளில் மாநில அரசுக்கான இட ஒதுக்கீடுத் தவிர மற்ற காலி இடங்கள் நீட் தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன.